பனாஜி,
கோவா மாநிலம் பாம்போலிம் நகரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் ருத்ரேஷ் நோயாளிக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்று சுகாதாரத்துறை மந்திரி விஷ்வஜித் ரானாவுக்கு செல்போன் மூலம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த சனிக்கிழமை மருத்துவமனைக்கு சென்ற மந்திரி விஷ்வஜித் ரானா பணியில் இருந்த டாக்டர் ருத்ரேசை கடுமையாக சாடினார். நீங்கள் உங்கள் நாவை அடக்க வேண்டும். நீங்கள் ஒரு டாக்டர். நான் பொதுவாக கோபப்படுவதில்லை. ஆனால் நீங்கள் சரியாக நடக்கவேண்டும். நீங்கள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். நீங்கள் இங்கு அகங்காரத்துடன் வேலை பார்க்கக்கூடாது. உங்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்கிறேன்’ என்று மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் வைத்து கூறினார்.
இந்த விவகாரத்தில் மந்திரி விஷ்வஜித் ரானாவின் செயல்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. டாக்டருக்கு ஆதரவு குரல் எழுந்தது. மேலும், டாக்டர் ருத்ரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து, டாக்டர் ருத்ரேஷ் சஸ்பெண்ட் நடவடிக்கையை முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் ரத்து செய்தார். அதேவேளை, தனது பேச்சுக்க்கு மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோவாவில் பல்வேறு மருத்துவமனைகளில் டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனிடையே, தனது கடுமையான வார்த்தைகளுக்கு டாக்டர் விஷ்வஜித் ரானாவிடமும், அவரது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், மருத்துவ பணியாளர்களை அவமானப்படுத்துவது என் எண்ணம் அல்ல என்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மந்திரி விஷ்வஜித் ரானா கூறினார்.
இந்நிலையில், மந்திரி விஷ்வஜித் ரானா பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டாக்டர் ருத்ரேஷ் அதிரடியாக அறிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய மந்திரியின் மன்னிப்பை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக டாக்டர் ருத்ரேஷ் கூறியதாவது,
மந்திரி விஷ்வஜித் ரானா ஸ்டுடியோவில் வைத்து மன்னிப்பு கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் என்னை அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் வைத்து அவமதித்தார். அதே இடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றார்.