வேட்பாளர் படிவங்களில் கையெழுத்திட பழனிசாமிக்கு அதிகாரமில்லை: புகழேந்தி

சென்னை: அதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களின் ஏ மற்றும் பி படிவங்களில் பழனிசாமி கையெழுத்திட்டது தவறு. அதற்கு அவருக்கு அதிகாரமில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குக்கு புகழேந்தி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 2 வேட்பாளர்களின் மனுக்களில், ஏ மற்றும் பி படிவத்தில் அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி கையெழுத்திட்டதை ஏற்க கூடாது. மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்திருந்தார். இருப்பினும், அவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் புகழேந்திக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கொடுத்த புகார் மனுக்கள் விபரங்களை, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளதாகவும், தேர்தல் ஆணைய இணையதள முகவரியில் விவரம் அறியலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குக்கு புகழேந்தி ஆதாரத்துடன் மீ்ண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்தல் ஆணைய இணையதளத்தில் மிகத் தெளிவாக 34-வது இடத்தில் அதிமுக என குறிப்பிட்டு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பெயரும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பெயரும் இந்த நிமிடம் வரை இப்பொழுதும் உள்ளது. இதுதொடர்பான பிரச்சினை தேர்தல் ஆணையத்தில் உள்ளது. பழனிசாமியை பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாததற்கு இதுவே காரணம்.

எனவே தான் நான் மனுவில் குறிப்பிட்டதுபோல பழனிசாமி பொதுச் செயலாளர் என கையொப்பமிட்டுள்ளது தவறு. கட்சி சார்பில் வேட்பாளர்களை அவர் அறிவிக்க முடியாது. ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திட அவருக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையம் பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாநிலங்களவைத் தேர்தலில் ஏற்றுக்கொண்டால் தவறான முடிவு எடுத்ததாக ஆகிவிடும். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராகவும் அமைந்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.