பாஜக – அதிமுக கூட்டணி நீடிப்பது கேள்விக்குறி: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கருத்து

திருநெல்வேலி: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சுயமாக சிந்திக்கக் கூடியவர். பாஜகவுடன் தற்போது கூட்டணி சேர்ந்துள்ள அவர், கடைசி வரை அவர்களுடன் இருப்பாரா என்பது கேள்விக்குறி என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார்.

பாளையங்கோட்டையில் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் முறையை, வங்கிகளுடன் இணைக்கும் திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. ரூ.10 லட்சம் கோடி தந்தோம், ரூ.20 லட்சம் கோடி தந்தோம் என்று மத்திய அரசு சொல்கிறதே தவிர, எந்த திட்டத்துக்கு, எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்று சொல்லவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழக ரயில்வே திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 701 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

சென்னையில் 2-வது மெட்ரோ ரயில் திட்டத்தை உள்துறை அமைச்சர் நேரடியாக வந்து, பழனிசாமி முதல்வராக இருக்கும்போது ஆரம்பித்தார். ஆனால், இதுவரை நிதி கொடுக்கவில்லை. ஆனால் ரூ.63 ஆயிரம் கோடி நிதி கொடுத்துள்ளதாக பாஜக பொய் சொல்கிறது. மத்திய அரசு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே நிதி கொடுத்துள்ளது. மாநில அரசு ரூ.26 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. மீதி பணம் கடனாகப் பெறப்பட்டு உள்ளது. கடனை திரும்பச் செலுத்துவதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதற்கு முழு பொறுப்பு தமிழக அரசுதான் என்று ஒப்பந்தம் போட்டுள்ளது.

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும் என அனைத்து கிராமங்களிலும் பெண்கள் கருதுகின்றனர். 234 தொகுதிகளிலும் தமிழக முதல்வர் சொல்லும் வேட்பாளருக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர்.

பாஜகவுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, கடைசி வரை அவர்களுடன் இருப்பாரா என்பதே கேள்விகுறி. எதிர்க்கட்சித் தலைவர் சுயமாக சிந்திக்கக் கூடியவர். அவர் நல்ல முடிவை எடுப்பார். பாஜகவின் எந்த முடிவும் தெளிவாக இருக்காது. எதைக் கேட்டாலும் டெல்லியில் முடிவு செய்வார்கள் என்று சொல்லிவிடுவார்கள். இவ்வாறு அப்பாவு கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.