புது டெல்லி: முதலீட்டாளர்களிடம் ரூ.2,700 கோடி மதிப்பிலான பண மோசடி வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் அமலாக்கத்துறை இன்று (வியாழக்கிழமை) சோதனை நடத்தி வருகிறது.
குஜராத்தின் தோலேரா நகரில் அதிக வருமானம் மற்றும் நிலம் தருவதாக வாக்குறுதி அளித்து, முதலீட்டாளர்களை ரூ.2,700 கோடி அளவுக்கு ஏமாற்றியதாக நெக்ஸா எவர்கிரீன் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகார்களின் பேரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெக்ஸா எவர்கிரீன் என்ற நிறுவனம் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெக்ஸா எவர்கிரீன் நிறுவனம் மீது ராஜஸ்தான் காவல்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் சிகார், ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் ஜுன்ஜுனு, குஜராத்தின் அகமதாபாத் ஆகிய இடங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது.