மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு எதிராக அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்யதுள்ளது.
மதுரை அம்மா திடலில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அறுபடை வீடுகள் அமைக்க போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் அதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்கலாம். ஆனால் பூஜைகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டு அடுத்த விசாரணை நாளைக்கு (ஜூன் 13) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்து முன்னணி மனுவில் கோரியிருப்பது போல் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா.அரங்கநாதன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அறுபடை வீடுகளில் குறிப்பிட்ட ஆகம முறைப்படியே பூஜை செய்ய வேண்டும். முருகனின் அறுபடை வீடுகளில் அறங்காவலர் குழு அனுமதி பெற்று, பாலாலயம் அமைத்து மூலவருக்கு உரிய பூஜைகள் செய்து, உற்சவரை மட்டுமே வெளியே கொண்டு வர முடியும். இதனால் இந்து முன்னணி அமைக்கும் அறுபடை வீடுகளில் மூலவர் சிலை அமைக்கவே முடியாது. உற்சவர் சிலையும் ஆகமப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்திய பிறகே பூஜை செய்ய முடியும். மாதிரி அறுபடை வீடுகளில் இருவேளை பூஜை என்பது ஆகமத்துக்கு முரணானது.
மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்புதல் பெறவில்லை. மதுரை மாநகராட்சி, தீயணைப்புத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமும் அனுமதி பெறவில்லை. மாதிரி அறுபடை வீடுகள் அமைத்து பூஜை செய்ய அனுமதிப்பது கோடிக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையை அவமதிப்பதாகும். ஆன்மிகத்தை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது.
கடவுளை கட்சிக்குப் பயன்படுத்தக்கூடாது. எனவே முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க தடை விதித்து, இந்து முன்னணியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.