கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ரவீந்திர நகர் பகுதியில் நேற்று போலீஸாருக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரவீந்திரநகர் காவல் நிலையம் அருகே நேற்று ஒரு கூட்டம் கூடத் தொடங்கியபோது, அது திடீரென வன்முறையாக மாறியது. அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் மீது அந்த கும்பல் கற்களால் தாக்கியது. இதனையடுத்து கும்பலைக் கலைக்க காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இருப்பினும், சந்தோஷ்பூர் அருகே கூட்டம் மீண்டும் ஒன்றுகூடி கொல்கத்தா காவல்துறையினருடன் மோதியது.
ரவீந்திரநகர்-அக்ரா பகுதியில் மோதல்களை அடக்க அதிகாரிகள் முயன்றபோது, காவல்துறை மாவட்டத் தலைவர் (துறைமுகம்) ஹரிகிருஷ்ணா பாய் உட்பட ஐந்து காவல்துறையினர் காயமடைந்தனர். இரண்டு அரசு வாகனங்கள் சேதமடைந்தன. ஒரு மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த, காவல்துறையினர் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வன்முறை தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
நில உரிமை தொடர்பான தகராறு காரணமாக இந்த மோதல்கள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கடை வைத்திருந்த இடத்தில் அவசரமாக ‘துளசி மஞ்சா’ கட்டப்பட்டபோது பதற்றம் தொடங்கியதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அந்த கடையின் வியாபாரி பக்ரீத் பண்டிகை கொண்டாட வெளியே சென்றிருந்தார். இந்த சூழலில் மற்றொரு குழு கோயில் நிலத்தில் கடை சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறி துளசி மஞ்சா கட்டினர். இதில் அதிகாரிகள் தலையிடுவதற்குள், இரு தரப்பினரின் இடையே போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. இது பின்னர் காவல்துறை மீதான தாக்குதல்களாக மாறின
மாநில எதிர்க்கட்சித் தலைவரும், பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, “இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள். வன்முறையில் பல போலீசார் காயமடைந்தனர், மேலும் பல போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மக்களைக் காப்பாற்றவும் பாதுகாக்கவும் உடனடியாக மத்தியப் படைகளை அப்பகுதியில் நிறுத்துமாறு நாங்கள் கோருகிறோம்.” என்று அவர் கூறினார்.
மேலும், “இன்று, ரவீந்திரநகர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள மகேஷ்தலாவிற்கு நான் ஒரு எம்எல்ஏவுடன் சென்று நேற்று ஜிஹாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான இந்து குடும்பங்களின் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளேன். நிர்வாகம் எனது வருகையைத் தடுக்காது என்று நம்புகிறேன்” என்று சுவேந்து அதிகாரி தனது எக்ஸ் பதிவில் கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ், “இந்த மோதல்கள் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பானவை அல்ல. இருப்பினும், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது மற்றும் மிகவும் கண்டிக்கத்தக்கது. காவல்துறை மிகவும் பொறுப்புடன் செயல்பட்டது. அவர்கள் நிலைமையை மோசமாக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.”என்று கூறினார். இந்த மோதல் தொடர்பாக மேற்குவங்க மாநில காவல்துறை இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.