புதுடெல்லி: கீழடி தொல்லியல் அகழ்வாய்வு அறிக்கையை வெளியிட தமிழகத்தின் வரலாற்றாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து சென்னை பல்கலைகழக வரலாற்றுத்துறை தலைவரும், செனட் உறுப்பினருமான பேராசிரியர் சுந்தரம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அகழ்வாய்வு அறிக்கையை அறிவியல் பூர்வமான ஆய்விற்கு அனுப்புவதாக சொல்லியுள்ளார்.
கீழடியில் ஆய்வு நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணா அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அறிவியல் பூர்வமான ஆதாரம் என்பது காலதாமதமே. இனியும் தாமதப்படுத்தாமல் ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். ’தொல்லியல் அகழாய்வு’ வரலாற்றுத் தரவுகளைத் தந்து கடந்தகால பண்பாடுகளை உறுதியாக கட்டமைக்கும் ஓர் அரிய முன்னெடுப்பாகும்.
இந்திய துணைகண்டத்தில் பல்வேறு மாநிலப்பகுதிகளில் நடந்தேறிய பல அகழாய்வுகள் அந்தந்த மொழி, மண்-இனமரபு சார்ந்த பண்டைய வரலாற்று மாண்புகளை வெளிக்கொணர்ந்து சமகால மக்களை வியக்க வைத்துள்ளன. கீழடியில் இந்திய தொல்லியல் துறை(ஏஎஸ்ஐ) சார்பில் தெற்குமண்டல அகழாய்வு அலுவலக கண்காளிப்பாளரான அமர்நாத் ராமகிருஷ்ணா ஆய்வு நடத்தினார்.
இது, வைகை நதி தோன்றுமிடமான வள்ளிமலை தொடங்கி அந்நதி கடலில் சென்று கலக்குமிடமான அழகன்குளம் வரை சுமார் 250கி.மீ பகுதி ப்பரப்பில் இருந்தது. இப்பகுதியில் அதிக சிதைவடையா நிலையில் 293-க்கு மேற்பட்ட தொல்லியல் ஆதாரங்கள் கண்டுணரப்பட்டுள்ளது. ஏஎஸ்ஐ அனுமதியுடன் மார்ச் 2015 முதல் செப்டம்பர் 2015, ஜனவரி 2016 முதல் செப்டம்பர் 2016 வரை என இரண்டு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன.
கீழடியில் அறிவியல் நெறி மண்ணடுக்கு முறைப்படி அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் அறிவியல் ரீதியாக பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதன் கரிம மாதிரிகளை ஐக்கிய அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் மியாமி நகரத்தின் பீட்டா கரிமப்பொருள் ஆய்வுகூடத்திற்கும் அனுப்பப்பட்டது.மேலும், தாவர தரவுகளை புதுச்சேரி பிரெஞ்ச் ஆய்வு நிறுவனத்திற்கும், எலும்பு எச்சமாதிரிகளை புனேவில் உள்ள டெக்கான் கல்லூரி ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இதன் முடிவுகளில் அவை இன்றிலிருந்து 2600 ஆண்டுகளுக்குமுன் நகரீய செங்கல் கட்டமைப்பு கொண்டவை என அறியப்பட்டுள்ளது. தங்கள் பெயர்களை தாங்களே தமிழியிலில் (தொல் தமிழ் எழுத்து வடிவங்களில்) மண்பாண்டங்களில் எழுதியுள்ளனர். இதன்மூலம், எழுத்தறிவு கொண்டு விவசாயம் சார்ந்த ஓர் நாகரிக வாழ்விடப்பகுதியாக தமிழகத்தின் கீழடி திகழ்ந்துள்ளது. இதை எவ்வித ஐயப்பாடின்றி வெளிக்கொணரப்பட்டு உள்ளன.
இதன் தாக்கமாக நன்கு நெறியுடன் அகழாய்வுப்பணி செய்துகொண்டிருந்த தொல்லியல் கண்காணிப்பாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவை காரணமின்றி இடமாற்றம் செய்யப்பட்டார். பிறகு நீதிமன்ற வழக்கினால் பெற்ற அனுமதியால் பெங்களூரு அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்படவிருந்த அகழ்வாய்வு தொல்பொருட்கள் மதுரையிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் முயற்சியால் தமிழ்நாடு தொல்லியல் துறை 2018 ஆம் ஆண்டு 4 ஆம்கட்ட அகழாய்வினையும் 2019 ஆம் ஆண்டு 5 ஆம்கட்ட அகழாய்வினையும் அறிவியல் நெறியுடன் செவ்வனே நடத்தியது. இந்த ஆய்வில், 5,820 தொல்பொருட்கள் மற்றும் 50அடி நீள செங்கல் சுவர், செவ்வக தொட்டி, திறந்த, மூடிய செங்கல் நீர்வழி கட்டுமானப்பகுதிகள் மற்றும் 108 மட்கலங்களில் தமிழி எழுத்துக்கள் பெயர் பொறிப்புகள் வெளிக்கொணரப்பட்டன.
இதனால், இன்றளவும் 10 கட்ட ஆண்டாக கீழடி எனும் தமிழர் மரபு தாய்மடி ஏராளமான தொல்லெச்சத் தரவுகளை ஈன்றுகொண்டிருக்கின்றன. அறிவியல் முறைப்படியான அகழாய்வறிக்கையினை 982 பக்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.எனினும், தமிழர் மாண்பை தடுத்திடும் விதமாக மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதை ஜுன் 10 இல் மத்திய அமைச்சர் ஷெகாவாத் கூறிய கருத்து வெட்ட வெளிச்சமாக்குகிறது.
என்னதான் அடுத்தடுத்து முயன்று தமிழர்தம் மரபினை, மாண்பினை மறைக்க முடியாது. இதற்கு மட்கல ஓடுகளில் பொறிக்கப்பட்டுள்ள 2500 ஆண்டுகளுக்கு முன்பான தமிழியில் ஆதன், குவிரன் ஆதன், சாந்தன் எனும் தமிழர்தம் தொல்மரபு, மண்-இனமரபு கதிரவன் ஒளிக்கற்றையால் ஒளிர்ந்தோங்கிநிலைக்கும். எனவே, இனியும் காலதாமதப் படுத்தாமல் கீழடி ஆய்வறிக்கையை ஏஎஸ்ஐ உடனடியாக வெளியிடுமாறு தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.