வானிலை முன்னறிவிப்பு: நீலகிரிக்கு ரெட் அலர்ட், 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை, நெல்லை மாவட்ட மலைப் பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஜூன் 14) கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு கர்நாடகம், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூன் 14) முதல் வரும் 17-ம் தேதி வரை சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

தமிழகத்தில் சனிக்கிழமை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை, நெல்லை மாவட்ட மலைப் பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 15-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை, நெல்லை மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். ஜூன் 16 முதல் 18-ம் தேதி வரை கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களஇல் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஜூன் 18 மற்றும் 19-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை நெற்குன்றத்தில் 17 செ.மீ., மணலி புதுநகரில் 14 செ.மீ., மணலியில் 12 செ.மீ., கொரட்டூரில் 11 செ.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 10 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, சென்னை வளசரவாக்கம் ஆகிய இடங்களில் 9 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, கும்மிடிப்பூண்டி, சென்னை அயப்பாக்கம், பெரம்பூர், அம்பத்தூர் ஆகிய இடங்களில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.