அகமதாபாத் : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து, மேலும் ஒரு உடல் விமானத்தின் வால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.
பிஜி மருத்துவக் கல்லூரியில், இளநிலை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் தவால் கமேட்டி இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்திக்கையில், “இன்றைய நிலவரப்படி விமான விபத்துப் பகுதியிலிருந்து 270 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.
மேலும், விமான விபத்து நடந்த இடத்தில் தடயங்களைத் தேடும் பணியில் தடயவியல் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 12) ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார். மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது அந்த விமானம் வெடித்துச் சிதறி தீப்பிடித்தது.
இந்த பயங்கரமான விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் இருந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் அந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்தவர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்ததாக தகவல் கூறுகிறது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உறவினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தில், மீட்புப் பணிகளுக்காக NSG குழு நிறுத்தப்பட்டுள்ளது.
விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB), சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), அகமதாபாத் குற்றப்பிரிவு மற்றும் உள்ளூர் காவல்துறை உட்பட பலரும் விபத்து குறித்து பல கட்ட விசாரணையை நடத்தி வருகின்றன.
தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) அதிகாரிகளும் வெள்ளிக்கிழமை சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
இந்நிலையில், விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து, மேலும் ஒரு உடல் விமானத்தின் வால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.
மீட்கப்பட்ட சடலங்கள் குறித்து அதிகாரிகள் பேசும்போது, விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்களின் டிஎன்ஏ பகுப்பாய்வு கணிசமாக துரிதப்படுத்தப்படும் என்றும், மூன்று நாட்களுக்குள் அவற்றை அடையாளம் காணும் பணிகள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.