'கேமராவை மெஷின்னு சொல்வாங்க!' – கொல்லங்குடி கருப்பாயி குறித்து நடிகர் ஆர்.பாண்டியராஜன்

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குகுடி கருப்பாயி இன்று காலை காலமானார், வயோதிகப் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர் ‘ஆண் பாவம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

இந்த நிலையில் நடிகர் பாண்டிய ராஜனிடம் கருப்பாயி குறித்துக் பேசினோம்.

பாண்டியராஜன்

வெள்ளந்தி மனுஷி

 ‘’காலையில் செய்தி கேட்டதுல இருந்தே எனக்கும் மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்குதுங்க.

அப்ப அந்த அம்மா ரேடியோ, கேசட்டுகள்ள பாடிக்கிட்டிருந்தாங்க. ‘ஆண்பாவம்’ படம் என்னுடைய இரண்டாவது படம். படத்துல ஒரு பாட்டி கேரக்டர் தேவைப்பட்டுச்சு. பாட்டுப்பாடிகிட்டே நடிக்க வேண்டிய கேரக்டர்ங்கிறதால அவங்களைக் கண்டுபுடிச்சு கமிட் செஞ்சோம்.

அக்மார்க் கிராமத்து வெள்ளந்தி மனுஷி. அவ்வளவு ஆச்சரியமாப் பார்த்தாங்க சினிமாவை. கேமராவையே மெஷின்னு தான் சொல்வாங்கன்னா பாருங்க.. அந்தளவு அநியாயத்துக்கு வெள்ளந்தித்தனம்.

அந்தப் படம் ஹிட் ஆனதுல அந்தப் பாட்டி கேரக்டருக்கும் பங்குண்டு. தொடர்ந்து ஒருசில படங்கள்ல நடிச்சாலும் ஊர்ல இருந்ததால சினிமாவுல பெரிசா வரலை.

கொல்லங்குடி கருப்பாயி

ஆனா என் மேல அவ்வள்வு பிரியமா இருந்தாங்க. நானும் என் அடுத்தடுத்த சில படங்கள்ல வாய்ப்பு கொடுத்தேன். என்னை தன்னுடய சொந்தப் பேரனைப் போலவே நினைச்சாங்க.

’ஆண் பாவம்’ படத்துல ஒரு சீன் வச்சிருந்தேன். அதாவது டாக்டர் ஊசி போட வருகிற சூழல்ல பாட்டி கண்ணை மூடிக்கிடும். ஊசின்னா அவ்வளவு பயம். நிஜத்துல ஒரு சம்பவம் அதேபோல நடந்தது.

ஒரு சமயம் எனக்கு உடல் நிலை சரியில்லாமப் போய் சென்னையில் அப்போலோ ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகியிருந்தேன். விஷயம் அவங்களூக்கு எப்படியோ தெரிஞ்சிடுச்சு. ஊருல இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துட்டாங்க.

பாண்டியராஜன்

ஆஸ்பத்திரியை விசாரிச்சு அங்க வந்துட்டவங்க உள்ள வந்து என்னைப் பார்க்காமா மருத்துவமனை வளாகத்துலயே உட்கார்ந்திருந்தாங்க.

எங்க வீட்டுல இருந்து போய் அவங்களைக் கூப்பிட உடல் சரியான பிறகே பார்ப்பேன். அதுவரை இங்கனயே இருக்கேனு சொல்லி உள்ளே வரலை. அதேபோல் ரெண்டு நாள் கழிச்சு நான் டிஸ்சார்ஜ் ஆன பிறகே என்னைப் பார்த்துட்டு ஊருக்குப் போனாங்க.

கணவர் இறந்ததுல இருந்தே தனியாளாகிட்ட அவங்ககிட்ட போனல தொடர்புலயே இருந்தேன். நேர்ல சந்திச்சு ரெண்டு வருஷத்துக்கு மேல இருக்கும்.

இந்த நிலையில இப்ப அவங்க மரணச் செய்திதான் வந்திருக்கு. இருக்கும் போது அடிக்கடி ‘கைக் கால் கெதியாக் கிடந்தா கொஞ்ச நாள் இருக்கலாம். இல்லாட்டி சட்டு புட்டுனு போய்ச் சேர்ந்திடணும்’னே சொல்லிட்டிருப்பாங்க.’’ என்றபடி கருப்பாயியுடன் தன் நினைவுகளைப் பகிர்ந்தார் பாண்டியராஜன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.