நாட்டுப்புற பாடல்களில் கொடிகட்டிப்பறந்த ‘ஆண்பாவம்’ படத்தில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி (99) காலமானார். மதுரை- தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி.
இவரை 1985-ம் ஆண்டு நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜன், ‘ஆண்பாவம்’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். அவரது பாட்டியாக நடித்து பிரபலமானார் கருப்பாயி. சினிமா மூலம் இவரது நாட்டுப்புற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பரவத் தொடங்கியது.

ஆண்களை நம்பாதே, கபடி கபடி , கோபாலா கோபாலா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 1993-ல் இவரது கலைச் சேவையை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கி கெளரவித்தார். “’ஆண் பாவம்’ நான் நடிச்ச முதல் படம். அதுக்கு அப்புறம் பல படங்கள் நடிச்சேன்.
இதில், சம்பளம் கொடுத்தவங்களைவிட ஏமாத்தினவங்கதான் அதிகம். ஆயிரம் ரூபாயைக் கையில் கொடுத்துட்டு, ‘ஊருக்குப் போங்க அனுப்பி வைக்கிறோம்’னு சொல்வாங்க. நானும் எதிர்பார்த்து காத்திருப்பேன். ஒண்ணும் வராது. சினிமாவுல நடிக்கபோய் என்னை மொட்டையடிச்சு அனுப்பினதுதான் மிச்சம்.
எனக்குப் பிள்ளை இல்லைங்கிற குறையைப் போக்கி தலைமகனாக இப்பவும் இருக்கிறது நடிகர் பாண்டியராஜன்தான். சென்னைக்கு போனால், என்னைப் பார்க்காம இருக்காது. நான் சினிமாவுல நடிக்கும்போது என்னையை யாரும் நடிகர் சங்கத்துல சேர்க்கலை.

பேரன் விஷால் வந்த பிறகுதான், உறுப்பினராக்கி அடையாள அட்டை கொடுத்துச்சு. இன்னைக்கு நான் சாப்பிடுற சாப்பாடு, பேரான்டி விஷால் கொடுக்குற பணம்தான். என்னை வாழவைக்கிற சாமி அது. விஷால் கல்யாணத்துக்கு நான் போணும். அதுவரைக்கும் என் உசுரு இருக்கணும்.” என 2018-ம் ஆண்டு விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருந்தார்.