மூணாறு,
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதியில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணி புரியும் பெண் போலீஸ் ஒருவர் வண்டிப்பெரியார் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், “வண்டிப்பெரியார் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசார் உடை மாற்றவும், கழிவறை செல்லவும் போலீஸ் குடியிருப்பு பகுதியில் ஒரு கழிவறையை பயன்படுத்தி வந்தனர். அந்த கழிவறையில் 4 ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் போலீசார் உடை மாற்றும் காட்சிகளை மர்ம நபர் ஒருவர் ரகசியமாக பதிவு செய்து வைத்துள்ளார். அந்த காட்சிகளை தனக்கு அனுப்பி ஆசைக்கு இணங்குமாறு மிரட்டுகிறார். இதேபோல் பல பெண் போலீசாரை மிரட்டி வருகிறார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன் பேரில் இடுக்கி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கழிவறையில் கேமராக்கள் பொருத்தியது அதே போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றிய வைசாக் (வயது 40) என்பது தெரியவந்தது. இவரது வீடு கழிவறை அருகே அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தி யாரும் இல்லாத நேரத்தில் கழிவறையில் கேமராக்கள் பொருத்தி அதனை தனது செல்போனில் இணைத்துள்ளார். பின்னர் கடந்த 7 மாதமாக பெண் போலீசார் உடைமாற்றுவதை தனது செல்போனில் பதிவு செய்து வந்துள்ளார். மேலும் அந்த ஆபாச வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண் போலீசாருக்கு அனுப்பி தனது ஆசைக்கு இணங்குமாறு வைசாக் மிரட்டியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வைசாக்கை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கழிவறையில் கேமராக்கள் வைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.