சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கிரிக்கெட்டில் சில வீதிகளில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என மூன்று பார்மட்டுகளிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதில் ஒரு வீரருக்கு அடிபட்டால் மாற்று வீரர்களை கொண்டு வருவது, ஒரு நாள் போட்டிகளில் புதிய பந்துகளை பயன்படுத்துவது போன்ற விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐசிசி. பேட்டிங் மற்றும் பௌலிங் என இரு அணிகளுக்கும் போட்டி சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஐசிசி இந்த விதிகளை கொண்டு வந்தது. இந்த புதிய விதிகள் உடனடியாக அமலுக்கும் வர உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் வரும் ஜூன் 17ஆம் தேதி முதலும், ஒரு நாள் போட்டிகளில் ஜூலை 2ம் தேதி முதலும், டி20 போட்டிகளில் ஜூலை 10ஆம் தேதி முதலும் அமலுக்கு வர உள்ளது.
ஒரு நாள் போட்டிகளில் என்ன மாற்றம்?
முன்னதாக ஒரு நாள் போட்டிகளில் இரண்டு முனைகளில் இருந்தும் புதிய பந்துகள் பயன்படுத்தப்படும். தற்போது மாற்றப்பட்ட விதிகளின்படி இந்த இரண்டு பந்துகளும் 34 ஆவது ஓவர் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். 35 வது ஓவரிலிருந்து 50 வது ஓவர் வரை இரண்டு பந்துகளில் ஒரு பந்தை மட்டுமே மீதமுள்ள 15 ஓவர்களுக்கு பயன்படுத்த வேண்டும். போட்டி தாமதமாக தொடங்கி 25 ஓவர்களுக்கு கீழ் குறைக்கப்பட்டால் மொத்த போட்டியிலும் ஒரு பந்து மட்டுமே பயன்படுத்தப்படும். இது பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு இருந்தது போல ரிவர்ஸ் சுவிங் செய்ய முடியும். சமீபத்திய ஆண்டுகளில் பவுலர்களால் அதனை பயன்படுத்த முடியாமல் இருந்தது.
மாற்று வீரருக்கான விதி!
ஒரு வீரருக்கு தலையில் அடிபட்டால் அல்லது போட்டியில் தொடர முடியாத அளவுக்கு காயம் ஏற்பட்டால் அந்தப் போட்டிக்கான மாற்று வீரர் (concussion substitute) அறிமுகப்படுத்தப்படுவார். இதில் சில சர்ச்சைகள் எழுந்த நிலையில், இனி போட்டி தொடங்குவதற்கு முன்பு கேப்டன் ஐந்து வீரர்களின் பெயரை சமர்ப்பிக்க வேண்டும். அதில் ஒரு பேட்ஸ்மேன், ஒரு ஆல் ரவுண்டர், ஒரு விக்கெட் கீப்பர், ஒரு ஸ்பின்னர் மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் இருக்க வேண்டும். வீரருக்கு அடிபட்டால் concussion substitute ஆக இந்த ஐந்து பேரில் இருந்து மட்டுமே ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். இந்த விதி 3 ஃபார்மட்டுகளிலும் நடைமுறைக்கு வர உள்ளது.