தமிழகம் முழுவதும் சீனியாரிட்டி பட்டியல் வெளியீடு எப்போது? – 7,000 காவல் அதிகாரிகள் காத்திருப்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் புதிய சீனியாரிட்டி பட்டியலை எதிர்நோக்கி எஸ்ஐ முதல் கூடுதல் எஸ்பி வரை 7 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 1,299 எஸ்.ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்.4-ம் தேதி வெளியிட்டது. சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் காவல் துறையில் இரண்டாம், முதல்நிலை மற்றும் தலைமைக் காவலர்களாக பணியில் உள்ளவர்களும் விண்ணப்பித்திருந்தனர். காவல் பணியில் உள்ளவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுவது வழக்கம்.

பொதுப்பிரிவு மற்றும் பணியில் உள்ள போலீஸாருக்கு தனித்தனி தேர்வு மற்றும் மதிப்பெண் வழங்கப்படும். அதில், தேர்வானவர்களுக்கு எஸ்ஐ பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை (சீனியாரிட்டி) வழங்கப்படும். ஆனால், 20 சதவீத ஒதுக்கீட்டில் தேர்வானவர்கள் அனைவரும் தேர்வின்போது பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முதலில் வைக்கப்பட்டு அதன் பின்னரே பொதுப்பட்டியலில் உள்ளவர்கள் இடம் பெறுவார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1999-ல் தேர்வான நேரடி (பொதுப் பிரிவு) எஸ்ஐ ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். விசாரித்த நீதிமன்றம், ‘தேர்வின்போது பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே சீனியாரிட்டி பட்டியலில் எஸ்ஐ.க்கள் இடம்பெற வேண்டும். பயிற்சி காலத்தில் பெற்ற மதிப்பெண்களை கணக்கில் கொள்ளக்கூடாது. பணியில் உள்ளவர்கள், புதிய தேர்வர்கள் என்ற பாகுபாடின்றி ஒரே தேர்வாக நடத்த வேண்டும். அதுவும் 2 மாதங்களுக்குள் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என கடந்த மே 1-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பழைய நடைமுறைப்படி நடைபெறுவதாக இருந்த எஸ்ஐ தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக கடந்த 9-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுமா? அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும்படி தமிழக காவல்துறை கேட்டுக் கொள்ளுமா? என்ற கேள்வி காவல்துறை வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. அதுவும் ஏற்கெனவே நடந்துமுடிந்த தேர்வுகளில் 20 சதவீதம் மற்றும் 80 சதவீத பொதுத் தேர்வு செய்து பணியில் உள்ளவர்களை பட்டியலிடுவதிலும் சிக்கல் உள்ளது.

இதற்கிடையே, 1996 முதல் இதுவரை (2023) நேரடி எஸ்ஐ.யாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்போது எஸ்ஐ, ஆய்வாளர், டிஎஸ்பி, ஏடிஎஸ்பியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர் இவர்களில் பெரும்பாலானோர் புதிய சீனியாரிட்டி பட்டியலை எதிர்நோக்கி உள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பிரிவு மூலம் தேர்வாகி பணியில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய குழு மூலம் நடத்தப்பட்ட தேர்வின்போது முதல், இரண்டு மற்றும் அதை தொடர்ந்து என மதிப்பெண் பெற்றோம். பின்னர், பயிற்சி கல்லூரியில் ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, எங்களுக்கு முன்னால் ஏற்கெனவே காவல்துறையில் பணியில் இருந்தவர்களின் (20 சதவீதம்) பெயர்கள் சேர்க்கப்பட்டது.

அவர்களில் பலர் எங்களைவிட திறன் குறைந்தவர்கள். மேலும், அதிகாரிகள் மனம் குளிரும்படி நடந்தவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களால் கைகாட்டப்பட்டவர்கள் என பல்வேறு காரணங்களால் சிலர், திறமையானவர்களை விட சீனியாரிட்டியில் முன்னிலையில் வந்தனர். இதனால், அவர்களுக்கு பதவி உயர்வு கிடைத்த பல ஆண்டுகளுக்கு பிறகே எங்களைப் போன்றவர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தது. அதுவரை நாங்கள் அவர்களுக்கு கீழ் பணி செய்யும் நிலை ஏற்பட்டது. தற்போதைய, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சீருடை பணியாளர் தேர்வின்போது பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி வழங்குவது சரியானது. வரவேற்கத்தக்கது’ என்றனர்.

அதேபோல், 20 சதவீத ஒதுக்கீட்டில் எஸ்ஐ.யாக தேர்வானவர்கள் கூறும்போது, ‘ஆண்டுதோறும் எஸ்ஐ தேர்வு நடத்தப்படவில்லை. இடைவெளிவிட்டு தேர்வு நடத்தப்பட்டது. இதனால், நாங்கள் காவலர் தேர்வெழுதி வெற்றி பெற்றோம். நாங்கள் ஏற்கெனவே உடல் தகுதியை நிரூபித்து விட்டதாலும், புதிதாக உள்ள இளைஞர்களோடு போட்டி போடுவது சரியான ஒப்பீடாக இருக்காது என்பதாலும் எங்களுக்கு ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இதுதான் சரியான நடைமுறை’ என்றனர்.

நேரடி எஸ்ஐ.க்களாக தேர்வு செய்யப்பட்டு பணியில் உள்ள 1996 பேட்ச்-சில் 350 பேர், 1997-ல் 400, 1999-ல் 1000, 2004-ல் 922, 2008-ல் 750, 2011-ல் 1,096, 2016-ல் 1,033, 2021-ல் 931 பேர், 2023-ல் 440 பேர் என சுமார் 7 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் எஸ்ஐ முதல் கூடுதல் எஸ்பி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில், இன்னும் ஓரிரு நாளில் அரசும், காவல்துறையும், நீதிமன்றமும் என்ன இறுதி முடிவு எடுக்கும் என்பதை தமிழகத்தில் நேரடி உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்து பல பொறுப்புகளில் தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.