Ind vs Eng: இந்திய வீரர் கருண் நாயார் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் கூட நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் விளாசிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய வீரராக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதையடுத்து, கருண் நாயர் ரஞ்சி டிராபி போன்ற தொடர்களில் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக விஜய் ஹசாரேவில் 8 இன்னிங்ஸில் 5 சதங்களை அடித்து அசத்தினார். இந்த நிலையில், தற்போது இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது கடின உழைப்புக்கு தற்போது பலன் கிடைத்ததாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கருண் நாயார் இந்திய அணி சேர்க்கப்படமால் இருந்தபோது, தன்னை ஓய்வு பெற்றுவிட சொன்னதாக கருண் நாயார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நான் இந்திய அணியில் இடம் பெறாதபோது, இந்திய அணியின் புகழ்பெற்ற விரர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு வெளிநாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் பங்கேற்க சொன்னார். அப்படி விளையாடுவதன் மூலம் அதிக அளவு பணம் கிடைக்கும். அதன் மூலம் வாழ்க்கையில் நல்ல இடத்திற்கு சென்று விடலாம் என கூறினார்.
அவர் நல்ல எண்ணத்தில் தான் சொன்னார். அதை நான் செய்து இருக்கலாம். ஆனால் பணத்தை விட எனக்கு இதுதான் முக்கியம். அந்த வழியை தேர்ந்தெடுத்து இருந்தால், என்னை நான் உதைத்திருப்பேன். இந்திய அணிக்காக மீண்டும் விளையாட முடியாது என்ற எண்ணத்தை நான் ஒருபோதும் என் மனதில் ஏற்றிக்கொண்டது இல்லை. இதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால் தற்போது நிலைமை எப்படி இருக்கிறது என்று பாருங்கள் என கூறினார்.
33 வயதான கருண் நாயார், இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் முச்சதம் உட்பட 374 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல் 2 ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடிய அவர் 46 ரன்களை எடுத்துள்ளார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் அவர் நல்ல ரன்களை பெற்று, தனது இடத்தை தக்கவைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: மீண்டும் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித்! பிசிசிஐ முக்கிய அறிவிப்பு!
மேலும் படிங்க: கவுதம் கம்பீருக்கு பதில் விவிஎஸ் லட்சுமணன்? கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட மாற்றம்!