புதுடெல்லி: ஈரானில் மறைந்த பெரும் தலைவர் அதிபர் அயத்துல்லா ருஹோல்லா கோமெய்னிக்கு உத்தரப் பிரதேசத்துக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. உ.பி.யின் பாராபங்கியின் கிராமத்திலிருந்து அவரது மூதாதையர் 19-ஆம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
70-களின் பிற்பகுதியில் ஈரானின் அரசியலுக்கு ஒரு புதிய திசையை வழங்கிய தலைவர் அயத்துல்லா ருஹோல்லா கோமெய்னி. அந்நாட்டில் இஸ்லாமியப் புரட்சிக்கு காரணமாக இருந்தவர் இந்த ருஹோல்லாதான். தற்போது, இஸ்ரேலுடன் ஈரானுக்கு நடைபெறும் போருக்கு இடையே கோமெய்னி ஒரு வெளிநாட்டவர் எனும் சர்ச்சை மீண்டும் கிளம்பி உள்ளது.
இது பற்றி பாக்கர் மொய்னி என்ற பத்திரிகையாளரின், ‘கோமெய்னி: லைஃப் ஆப் அயத்துல்லா’ எனும் நூலில் இதற்கான குறிப்புகள் உள்ளன. இவர், பிபிசியில் பெர்ஷியன் மொழிக்காகப் பணியாற்றியவர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் பத்திரிகையாளராக செய்தி சேகரிக்கும் பணியில் மொய்னி இருந்தார். அவரது நூலில், கோமெய்னி குடும்பம் இந்தியாவின் உத்தரபிரதேசத்துடன் நேரடியாக தொடர்புடையது என்ற தகவல்கள் உள்ளன.
இந்நூலின்படி, லக்னோவின் அருகிலுள்ள நிஷாபூரில்தான் ஈரானின் புரட்சிக்கு பிறகான முதல் அதிபர் ருஹோல்லா கோமெய்னியின் மூதாதையர்கள் வாழ்ந்துள்ளனர். அப்போது அவத் பிரதேசம் என்றழைக்கப்பட்ட உ.பியில் பல ஷியா முஸ்லிம் நவாபுகளும் இருந்துள்ளனர். ஆங்கிலேயரின் வருகைக்கு பின் அவத் மன்னர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதனால், கோமெய்னியின் மூதாதையர்கள் அப்போதைய பெர்ஷியாவான ஈராக் வழியாக ஈரானுக்குச் சென்றுள்ளனர்.
உ.பி.யின் நிஷாபூரிலிருந்து மூதாதையர்களில் ஒருவரான தீன் அலி ஷா பாராபங்கியில் உள்ள கின்டூர் கிராமத்தில் வசித்தார். இந்த கிண்டூரிலிருந்து, அவரது குடும்பம் 19-ம் நூற்றாண்டில் ஈரானின் கோமெய்ன் நகருக்கு குடிபெயர்ந்தது. இதன் காரணமாகவே அவர்கள் குடும்பத்தாரின் பெயர்களில் கோமெய்னி என்பது இணைந்தது. ஈரானில் இஸ்லாமியப் புரட்சியைக் கொண்டுவந்த அயத்துல்லா ருஹோல்லா கோமெய்னியின் தாத்தா சையத் அகமது முஸாவி.
தீன் அலி ஷாவின் மகனான இந்த முஸாவி, உ.பியின் பாராபங்கி கிராமத்தில் பிறந்தார். ‘முஸாவி’ என்பது அவர்களது குடும்பப் பெயர். இன்னும் கூட உ.பியில் இந்த குடும்பத்தின் சில சந்ததிகள் தங்களது பெயர்களில் ‘முஸாவி’ என்பதை இணைத்து கொள்கின்றனர்.
அக்காலக் கட்டத்தில், ஈரானிலிருந்து பல இஸ்லாமிய அறிஞர்கள், தங்களது மதத்தைப் பரப்புவதற்காக பலநாடுகளுக்கு பயணம் செய்ததாக ஒரு வரலாற்று கூற்று உள்ளது. இவர்களில் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், ஈரானிய அறிஞர்கள் பலர் இந்தியாவின் லக்னோ, பாராபங்கி மற்றும் ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கும் வந்துள்ளனர்.
ஷியா நவாபுகளின் ஆதரவு: பாராபங்கி அந்த நேரத்தில் ஷியா நவாபுகளின் பகுதியாக இருந்தது. இந்த நவாபுகள், மசூதிகள் மற்றும் இமாம்பாடாக்களில் (ஷியாக்களின் புனிதத்தலம்) அறிஞர்களுக்கு ஆதரவளித்து பதவியையும் வழங்கினர். அவர்கள் அதிக திறமையானவர்களாக இருந்தால், அவர்களுக்கு நிறைய பதவி உயர்வுகளும் நவாபுகளால் வழங்கப்பட்டன. அப்போது பெருகிய முஸ்லிம்களின் ஷியாப் பிரிவினர் இன்றும் உ.பியில் பெருமளவில் வாழ்கின்றனர்.
மதப்பிரச்சாரத்துக்காக இடப்பெயர்வு: ஈரானியர்களின் இடம்பெயர்தலுக்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அக்காலகட்டத்தில், ஈரானில் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டம் நடைபெற்றது. அத்தகைய சூழ்நிலையில், குழப்பமாக இருந்த நாட்டில் அமைதி காணப்படவில்லை. இச்சூழலிருந்து விடுபடவும் அங்கிருந்த அறிஞர்கள் மதப்பிரச்சாரத்துக்காக இடம்பெயரத் துவங்கினர். இந்த இடப்பெயர்வு, அவர்களுக்கு எளிதான மற்றும் மதிப்புமிக்க வாழ்க்கையை அளித்ததாகக் கருதப்படுகிறது.
உ.பியின் பாராபங்கியில் பிறந்த ‘முஸாவி’- இந்த வரிசையில், ஈரானிலிருந்து இந்தியா வந்த ஒரு குடும்பத்தில் 1800ம் ஆண்டுகளில் சையத் அகமது முஸாவி பாராபங்கியில் பிறந்தார். லக்னோவின் தற்போதைய அண்டை மாவட்டத்தின் கின்டூர் என்ற கிராமத்தில் குடியேறினார். பின்னர், முஸாவி ஒரு புனிதப் பயணமாக1830ல் ஈராக்குக்குச் சென்றார். இங்கு ஷியாக்கள் போற்றும் அலியின் சமாதி அமைந்துள்ளது. இங்கிருந்து அகமது முஸாவி ஈரானை அடைந்தார்.
3 பெண்களை மணந்த ‘முஸாவி’- பிறகு, முஸாவியின் குடும்பம் ஈரானின் கோமெய்னி நகரில் வாழத் துவங்கியது. அப்போது மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்ட அகமது முஸாவிக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். இவர்களில் ஒருவரது மகனான முஸ்தஃபாவின் மகன்தான் 1902ல் பிறந்து புரட்சியாளராக உருவெடுத்த அயத்துல்லா ருஹோல்லா கோமெய்னி. அதாவது, இந்த ருஹோல்லா கோமெய்னி, உ.பியில் வாழ்ந்த அகமது முஸாவியின் பேரன் ஆவார்.
அமெரிக்காவின் தாக்கம்: அப்போது ஈரான், மேற்கத்திய நாடுகளின் கைப்பிடியில் சிக்கித் தவித்தது. குறிப்பாக அமெரிக்காவின் தாக்கத்தால் அங்கிருந்த இஸ்லாம் மறையத் துவங்கியது. இதை எதிர்த்து ருஹோல்லா கோமெய்னியின் ஆக்ரோஷமானப் பிரச்சாரங்களின் காரணமாக ஈரானில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டது. இதனால், 1979ம் ஆண்டில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது.
ருஹோல்லாவின் சிறைக் கட்டுரைகள்: ஈரான் புரட்சியின் போது, ருஹோல்லா கோமெய்னி நாடுகடத்தப்பட்டார். அப்போது, ருஹோல்லா கோமெய்னியின் குடியுரிமை மீது முதன்முறையாகச் சர்ச்சைகள் கிளம்பின. இதற்கு பதிலளிக்கும் வகையில் சிறையிலிருந்த ருஹோல்லா கோமெய்னி தனது மூதாதையர்கள் இந்தியாவில் வாழ்ந்ததாகவும், மதத்தைப் பரப்புவதற்காக சென்றவர்களின் வேர்கள் ஈரானுடையது எனக் குறிப்பிட்டு பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
கொல்லப்பட்ட‘முஸாவி’- 1869ல் நிலச்சுவான்தாரர்களால் கொல்லப்பட்ட தனது தாத்தா அகமது முஸாவி, கர்பாலாவில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். ருஹோல்லாவின் இந்த சிறைக் கட்டுரைகள் அவரை வெளிநாட்டவர் என்று நிரூபிக்கும் முயற்சிகளை முறியடித்தன. இதன் பின்னணியில் உ.பியில் பிறந்து வளர்ந்த அகமது முஸாவியின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட ருஹோல்லா கோமெய்னி காரணமானார்.
முகம்மது ரெசா பஹல்வியின் அரசு கவிழ்ப்பு: இவர், தன் தாத்தாவின் கொள்கைகளால் புரட்சிசெய்து சிறைபட்ட கோமெய்னிக்கு பின்னால் பொதுமக்கள் அணிதிரண்டனர். ருஹோல்லா கோமெய்னியின் போராட்டங்களால் 1979ல் ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. அப்போது, தலைநகரான தெஹ்ரானியில் இருந்த ஈரானின் தலைவர் ஷா முகமது ரெசா பஹல்வியின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
சிஷ்யர் அயத்துல்லா அலி கோமெய்னி: இதையடுத்து, தெஹ்ரானை தலைநகராகக் கொண்ட ஈரானில் இஸ்லாமிய ஆட்சி தொடர்கிறது. புதிய ஈரானின் முதல் உச்சத் தலைவர் பதவியில் ருஹோல்லா கோமெய்னி அமர்ந்தார். இருப்பினும், அடுத்த 10 ஆண்டுகள் ஈரானுக்கு மிகவும் கொந்தளிப்பாக இருந்தன. எனினும், ருஹோல்லா 1989ல் தான் இறக்கும் வரை ஆட்சியில் இருந்தார். அவருக்கு பின் அதிபரான ருஹோல்லாவின் சிஷ்யரான அயத்துல்லா அலி கோமெய்னி தற்போது ஆட்சியில் தொடர்கிறார்.