துடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வலியுறுத்திய நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
‘தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என்று `தக் லைஃப்’ பட இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசியதற்கு எதிராக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ‘‘கமல்ஹாசன் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை திரையிட முடியாது”என்று கூறி, மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார்.
இதற்கு எதிராக சமூக ஆர்வலர் மகேஷ் ரெட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் உஜ்ஜால் புயன், மன்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘‘கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தடை, அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள பேச்சு, கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல். கன்னடஅமைப்பினரின் மிரட்டலுக்கு கர்நாடக அரசு பணிந்துள்ளது”என வாதிடப்பட்டது.
நீதிபதி மன்மோகன், ‘‘நாடு முழுவதும் தக் லைஃப் படத்தை வெளியிட மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் சான்றிதழ் போதுமானது. அதைப் பெற்ற படத்தை திரையிடுவதை யாராலும் தடுக்க முடியாது. குறிப்பிட்ட கும்பலோ, அமைப்பினரோ சட்டத்தை மீறுவதை அனுமதிக்க முடியாது. திரையரங்கை கொளுத்துவோம் என கன்னட அமைப்பினர் எச்சரித்தால், சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான கர்நாடக அரசு எப்படி அமைதியாக இருக்க முடியும்?
ஒரு கும்பல் திரையரங்கையோ, தெருவையோ கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. சட்டத்தின் ஆட்சியை மீறுவதை, கர்நாடக அரசு எவ்வாறு அனுமதிக்கிறது? கர்நாடகாவில் அனைவரும் தக் லைஃப் படத்தை பார்க்க வேண்டுமென ஆணை பிறப்பிக்க முடியாது. ஆனால், நிச்சயமாக அந்தப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்க முடியும். கமல்ஹாசன் கருத்துக்கு மாற்று கருத்து தெரிவிக்கலாம். பெங்களூருவில் உள்ள அறிவுஜீவிகள் கூட்டறிக்கை வெளியிடலாம். அதனை விடுத்து திரையரங்கை கொளுத்துவோம் என்பதை ஏற்க முடியாது.
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டுமென கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வலியுறுத்தியுள்ளார். இதுதான் நீதிபதியின் பணியா? இந்த வழக்கில் கர்நாடக அரசு ஏன் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யாமல் இருக்கிறது? ஜூன் 18-ம் தேதி (இன்று) பதில் தாக்கல் செய்ய வேண்டும். மறுநாள் (ஜூன் 19) நாங்கள் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கிறோம்”என்றார்.
கர்நாடகாவில் திரையிடப்படும்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறும்போது, “உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்கிறோம். எல்லாவற்றுக்கும் எல்லை இருக்கிறது. கன்னட அமைப்பினர் அதை புரிந்து நடக்க வேண்டும். சட்டத்தை யாரும் கையிலெடுப்பதை அனுமதிக்க முடியாது. கர்நாடகாவில் அமைதி நிலைநாட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். நாங்கள் கன்னட அமைப்பினருக்கு சுதந்திரம் அளித்திருந்தாலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் விரைவில் திரையிட அனுமதிக்கப்படும்”என்றார்.