நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நேற்று முன்தினம் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதையொட்டிய மேற்கு வங்கப் பகுதிகளில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும்.
தெற்கு குஜராத் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நேற்று முன்தினம் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, குஜராத் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு திசையை நோக்கி நகரக்கூடும்.
இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் 23-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 78.8-80.6 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, வடக்கு- மத்திய வங்கக் கடலின் சில பகுதிகள், மத்திய அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு அரபிக் கடலின் சில பகுதிகள், குஜராத், கொங்கன் மற்றும் வடக்கு அரபிக்கடல், தெற்கு அரபிக் கடலின் பெரும்பாலான பகுதிகள், கோவா-கர்நாடகா- கேரளா கடலோரப் பகுதிகள், லட்சதீவு-மாலத்தீவு பகுதிகளில் இன்று அதிகபட்சமாக மணிக்கு 60 முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 21 செமீ மழை பதிவானது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.