டெஹ்ரான்,
இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்துவிட்டதோடு, இஸ்ரேல் நடத்திவரும் அதிரடி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதனிடையே, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்காக மசோதாவை தயாரிக்க ஈரான் நடாளுமன்றம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை ஈரான் வெளியுறவு மந்திரி இஸ்மாயில் பகாயி உறுதிப்படுத்தி உள்ளார்.
தாக்குதல் சம்பவம் அதிரித்து வரும்நிலையில் இரு நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலால் பல இடங்கள் கடும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகின்றன.
இதேபோன்று ஈரானின் குவாம் நகர் அருகே உள்ள போர்டோவ் அணு உலை மீது இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த சூழலில் ஈரான் ராணுவத்தின் குவாட் படைப்பிரிவின் கட்டுப்பாட்டு மையத்தைத் தாக்கி அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம், இன்று ஈரான் நாட்டு அரசு தொலைக்காட்சி நிறுவனம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
தாக்குதல் நடந்த போது அரசு செய்தி நிறுவனத்தின் பெண் செய்தி வாசிப்பாளர் சாகர் இமாமி என்பவர் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏவுகணை ஒன்று அந்த கட்டிடத்தை கடுமையாக தாக்கியது. நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த அவர், கட்டிடம் இடிந்து சிதறுவதை கண்டதும் எழுந்து ஓடினார். இந்த தாக்குதல் சம்பவத்தில் அந்த கட்டிடம் முழுமையாக சேதமடைந்தது.
இந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பானது. தாக்குதல் நடந்த போதும் ஈரான் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து செய்திகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.