இளம் கிரிக்கெட் வீரர்களின் வயதை சரியான முறையில் கணக்கிட கூடுதல் எலும்பு சோதனைகளை மேற்கொள்ள உள்ளது பிசிசிஐ. இந்த ஐபிஎல் தொடங்கியதில் இருந்து வீரர்களின் வயது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது. குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் மீது வயது தொடர்பான புகார்கள் அதிகமாக வந்தது. இதற்கு முன்பு ரஷித் கான் போன்ற வெளிநாட்டு வீரர்கள் மீது இது போன்ற புகார்கள் வந்த நிலையில், தற்போது இந்திய அணியின் வீரர்கள் மீதும் எழுந்துள்ளது. தன்னுடைய வயதை குறைத்து சொல்கிறார் வைபவ் சூர்யவன்ஷி என்றும், அவரின் உண்மையான வயதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
வைபவ் சூர்யவன்ஷி
இந்த ஆண்டு ஐபிஎல்லில் பலராலும் பேசப்பட்ட நபர் வைபவ் சூர்யவன்ஷி. 14 வயதே ஆகும் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. முதலில் சில போட்டிகளில் இடம் பெறவில்லை என்றாலும் பிறகு இடம் பெற்ற அனைத்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே பெற்றுள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. வைபவ் சூர்யவன்ஷியின் பழைய வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், அவர் பார்ப்பதற்கு 14 வயது போல் இல்லை. 16 அல்லது 17 வயது இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர். தனது பிறந்த தேதியை அவர் மாற்றி கூறியுள்ளார் என்றும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.
தந்தை பதிலடி
வைபவ் சூர்யவன்ஷி மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ள அவருடைய தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி, “வைபவ்க்கு 8 1/2 வயது இருக்கும்போதே பிசிசிஐயின் எலும்பு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டார். அவர் தற்போது இந்தியாவின் U19 அணியில் இடம் பெற்றுள்ளார். அவரது வயதை நிரூபிக்க எந்தவித சோதனைக்கும் செல்ல அவர் தயாராக உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ புதிய விதி!
இந்நிலையில் இது போன்ற சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் எதிர்காலத்தில் வராத அளவிற்கு பிசிசிஐ தற்போது கூடுதலாக ஒரு எலும்பு சோதனைகளை மேற்கொள்ள உள்ளது. பிசிசிஐயின் தற்போதுள்ள விதிகளின்படி ஒவ்வொரு வீரரும் TW3 முறையின் கீழ் எலும்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இனி புதிய விதிகளின்படி, U16 விளையாடும் வீரர்கள் தங்களது வயது தீர்மானிக்க மற்றொரு கூடுதல் எலும்பு சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வீரர்களின் வயதை சரியான முறையில் அளவிட முடியும் என்றும், யாரும் வயதை வைத்து ஏமாற்ற முடியாது என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.