டெஹ்ரான்: இஸ்ரேல் மீது ‘ஃபதா 1’ என்ற ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வீசி ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது.
அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரானும் பதிலடி தாக்குதலில் இறங்கியது. இதில் ஈரானின் ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இஸ்ரேலிலும் உயிரிழப்பு எண்ணிக்கு 25-ஐ தாண்டிவிட்டது, 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள போர் நேற்று 6-வது நாளாக தொடர்ந்தது. இதில் ‘ஃபதா 1‘ என்ற சூப்பர்சோனிக் ஏவுகணைகளை ஈரான், இஸ்ரேல் மீது வீசியது. ஈரான் இந்த வகை ஏவுகணையை இஸ்ரேல் மீது வீசுவது இது முதல் முறை அல்ல. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி இஸ்ரேலை ‘ஃபதா 1’ ஏவுகணை மூலம் இஸ்ரேல் தாக்கியது.
இந்த சூப்பர்சோனிக் ஏவுகணை மேக் 3 வேகத்தில் அதாவது ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் சென்று தாக்கும். மணிக்கு 17,900 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணையை நடுவானில் இடைமறித்து அழிப்பது சிரமம். ‘ஃபதா 1’ ஏவுகணையை ஈரான் கடந்த 2023-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதற்கு ‘ஃபதா 1’ என ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி பெயர் வைத்தார். 12 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை 1,400 கி.மீ தூரம் சென்று தாக்கும். திட எரிபொருளில் இயங்கும் இந்த ஏவுகணை 200 கிலோ வெடிகுண்டை எடுத்துச் சென்று தாக்கும்.
போரை நிறுத்திக் கொள்ளும் இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்தும் இரு நாடுகளும் தொடர்ந்து மோதிக் கொள்கின்றன. இதனால் இரு தரப்பிலும், குடியிருப்பு பகுதிகள் பலத்த சேதம் அடைந்துள்ளன.
ஈரான் மதத் தலைவர் அயத்துல்ல அலி கமேனி எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘கடவுளின் பெயரில் போர் தொடங்கியுள்ளது. இஸ்ரேலுக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். இஸ்ரேலியர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டோம்’’ என கூறியுள்ளார். இதனால் இரு நாடுகள் இடையே போர் மேலும் தீவிரம் அடையும் எனத் தெரிகிறது.