உக்ரைனில் ‘ஆபரேஷன் கங்கா’ போல ஈரானில் இருந்து இந்தியர்களை உடனடியாக மீட்க முடியாதது ஏன்?

புதுடெல்லி: போர்ச்சூழல் காரணமாக, ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேற்ற முடியாததன் பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைனில் இருந்தது போன்ற சாதகமான சூழல் இல்லாததால் இந்தியர்கள் வெளியேறுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஈரானில் ஆயிரக்கணக்காக இந்திய மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். ஈரானில் உள்ள சுமார் 10,000 இந்தியர்களில் 2,000 பேர் மாணவர்கள். சுமார் 6,000 பேர் நீண்ட காலமாக ஈரானில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு அங்கு வசித்து வரும் இந்தியர்கள். இவர்களைத் தவிர, இந்திய மாலுமிகள் மற்றும் கப்பல் துறையுடன் தொடர்புடையவர்களும் ஈரானில் உள்ளனர். இவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற முடியாத நிலை உள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அங்கு சிக்கியிருந்த இந்தியர்களில் ஆயிரக்கணக்காக மாணவர்களும் இருந்தனர். கடந்த 2022 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்துக்கும் இடையில் சுமார் 22,500 இந்தியர்கள், உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு வெற்றிகரமாக மீட்டு அழைத்து வரப்பட்டனர். இதற்காக, ‘ஆபரேஷன் கங்கா’ எனும் பெயரில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்தது.

‘ஆபரேஷன் கங்கா’ மூலம் மொத்தம் 90 விமானங்களில் உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர். அவற்றில் 14 விமானங்கள் அண்டை நாடுகளில் இருந்து இந்திய விமானப் படையால் இயக்கப்பட்டன. இதற்காக ஹங்கேரி, ருமேனியா, மால்டோவா, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளிடமிருந்து இந்தியா அதிகமான ஒத்துழைப்பைப் பெற்றது. இது ‘ஆபரேஷன் கங்கா’வின் செயல்பாடுகளை எளிதாக்கியது. இந்தியாவுடன் நல்ல உறவைக் கொண்ட போலந்து வழியாக அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களை வெளியேற்ற முடிந்தது. இதற்காக பிரதமர் மோடி தனது பயணத்தின் போது போலந்தையும் பாராட்டினார்.

ஆனால், ஈரானில் இருந்து அதுபோன்ற பெரிய அளவிலான வெளியேற்றம் அவ்வளவு எளிதானது அல்ல எனக் கூறப்படுகிறது. புவியியல் அமைப்பு, வான்வழிகளில் தடைகள், ராஜதந்திர உணர்திறன் மற்றும் அச்சுறுத்தல் உணர்வு ஆகியவை இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. ஈரானில் இருந்து எந்தவொரு வெளியேற்ற நடவடிக்கைக்கும் இந்திய அரசு இன்னும் எந்தப் பெயரையும் சூட்டவில்லை. ஈரானில் இருந்து வானில் பறக்க, புவியியல் மற்றும் ராஜதந்திர தடைகள் உள்ளன.

மேலும், உக்ரைனுடன் ஒப்பிட்டால், ஈரானில் இருந்து திரும்பி வர விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கையும் குறைவு. இத்துடன் இந்தியர்களுக்கான பாதுகாப்பான வழிகள் மற்றும் அவர்களது விருப்பங்கள் குறைவாகவே உள்ளன. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் சொந்த வளங்களுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது

ஆனால், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களானது ஈரானின் பல பகுதிகளில் பரவியுள்ளன. ஈரானில் இருந்து வெளியேறும் அனைத்து பாதைகளும் ஆபத்துகளால் நிறைந்துள்ளன. ஈரானில் சாலை மற்றும் ரயில் வழித்தடங்களும் பாதுகாப்பான, நிச்சயமான நிலையிலும் இல்லை. ஈரான் நகரங்களில் பல சாலைகளும் ராணுவப் பகுதிகள் வழியாக செல்கின்றன. இந்த நிலை ஈரானை விட்டு வெளியேறும் பொதுமக்களுக்கு பாதுகாப்பானவை அல்ல.

ஈரானின் கிழக்கு அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ராஜதந்திர ரீதியாகவும் இந்தியாவுக்கு பிரச்சினையாக உள்ளன. இந்தியாவுக்கான தனது வான்வெளியை பாகிஸ்தான் மூடியுள்ளது. மேலும், பாகிஸ்தானின் தடைகளால் தரைவழியாக வெளியேற்றுவதும் சாத்தியமில்லை. இந்தியா – ஆப்கானிஸ்தான் உறவுகள் ஓரளவு மேம்பட்டுள்ளன. இருப்பினும், அங்கிருந்து வெளியேற்றுவதற்கான தளவாடங்களும் கடுமையான பிரச்சினைகளாகவே உள்ளன.

ஆப்கானிஸ்தானின் விமானப் பாதைகளிலும் இந்தியாவுக்கு விமானங்கள் பறக்க முடியாத நிலை. ஏனெனில், விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்ல வேண்டியிருக்கும். இது, இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பின் பாகிஸ்தானால் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், ஈரானில் இந்தியாவின் வெளியேற்ற நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

முதல் கட்டமாக, சுமார் 110 பேர் ஈரான் – ஆர்மீனியா எல்லையைக் கடந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள். இது தவிர, 600 முதல் 700 பேர் தெஹ்ரானில் இருந்து அந்நாட்டின் புனித நகரமான கோமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இருப்பினும், அவர்களால் ஈரானின் அரக், கோர்ராமாபாத், இஹான், தப்ரிஸ் மற்றும் கெர்மன்ஷா போன்ற நகரங்களுக்குச் செல்ல முடியாது. ஏனெனில், இந்த நகரங்கள் அணுசக்தி மற்றும் ராணுவ வசதிகளுக்கு அருகில் உள்ளன.

ஆர்மீனியா, அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடன் நில எல்லைகளை ஈரான் பகிர்ந்து கொள்கிறது. இவற்றில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வெளியேற்றத்துக்கு உகந்தவை அல்ல.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் உருவான இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது, பாகிஸ்தானை அஜர்பைஜான் ஆதரித்தது. எனவே, துர்க்மெனிஸ்தான் தற்போது இந்தியர்கள் வெளியேறும் ஒரு வழியாக உள்ளது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.