திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் காதல் ஜோடி திருமணம் செய்த விவகாரத்தில், 17 வயது சிறுவனை பெண்ணின் தந்தை கடத்தியதும், அதில் புதிய பாரதம் கட்சித் தலைவர் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியான தகவலும் தான் தமிழ்நாட்டில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.
சிறுவன் கடத்தல் வழக்கு
இந்த விவகாரத்தில் ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பூவை ஜகன் மூர்த்திக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், முன்ஜாமீன் கோரி ஜெகன்மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை சில தினங்களுக்கு முன்பு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற ஒரே காரணத்திற்காக பூவே ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உத்தரவிடவில்லை என தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த சிறுவனை ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் காரில் கடத்தி சென்று மிரட்டினார் எனத் தகவல் தெரிந்ததும் அவரை பிடித்து விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தது.

இதனை அடுத்து சீருடையில் இருந்த நிலையிலேயே ஏடிஜிபி ஜெயராமனை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தினர்.
தன் மீதான நடவடிக்கை எதிராக ஜெயராமன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில். இந்த மனு மீதான விசாரணை இன்று விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.
அப்போது ஏடிஜிபி ஜெயராமன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `இந்த வழக்கில் காவல் அதிகாரி ஜெயராமன் எதிர்மனுதாரராக கூட இல்லாத நிலையில் தன்னை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எனவே இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ எனவும் கோரிக்கை வைத்தார்
`இன்றே சொல்லுங்கள்’
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `சம்பந்தப்பட்ட இந்த ஏடிஜிபி கைது செய்யப்படவில்லை. அவர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டு இருக்கிறார்’ என கூறினார்
அப்போது பேசிய நீதிபதிகள், `அப்படி என்றால் அவரை ஏன் இடைநீக்கம் செய்தீர்கள். அவர் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி. அவருக்கு நீங்கள் இதை செய்திருக்கக் கூடாது. நான் 18 வருடங்களாக நீதிபதியாக இருக்கிறேன். நாடு முழுவதும் இந்த மாதிரியான உத்தரவுகள் வருவது உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது” என கூறினார்கள்

`அவரது இடைநீக்கத்தை திரும்ப பெறுவது தொடர்பான நிலைப்பாட்டை அரசிடம் கேட்டு இன்றே சொல்லுங்கள்’ என தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞரை கேட்டுக் கொண்ட நீதிபதிகள் நாளைய தினமே இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் எனக் கூறினர்.