போர் என்பதே அரசியல் என்றால், அதை தூண்டிவிடுவதும், போருக்கு ஆதரவாக அணிகள் சேர்வதும், மறைமுகமாக ஆதரிப்பதும், ஆயுதம் வழங்குவதும், கருத்து மட்டுமே சொல்லிவிட்டு ஒதுங்கி நிற்பதும், மத்தியஸ்தம் செய்வதும் நுண்ணரசியல் வகையறா எனலாம். எந்த இரு நாடுகள் மோதிக் கொண்டாலும் கோதாவுக்கு வெளியே நிற்கும் மற்ற நாடுகள் மேலே பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு வகையறாவைச் சேர்ந்ததாகவே இருக்க முடிகிறது. நவீன புவி அரசியலில் மாறிவரும் பொருளாதார சார்புகள் அப்படியான நிலைப்பாட்டினை எடுக்கும் நிர்பந்தத்துக்கு உலக நாடுகளைத் தள்ளுகிறது. இந்தப் புள்ளியில்தான், இஸ்ரேல் உடனான போரில் ‘நண்பன்’ ஈரான் சார்ந்த அணுகுமுறையில் ரஷ்யா ‘நிதான’ அரசியலைப் பின்பற்றி வருகிறது.
நண்பனுக்கு ஒன்று என்றால்..! – கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் அணுசக்தி மையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தியது. அன்றைய தினமே, ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு அடுத்தடுத்து பேசினார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். கூடவே க்ரெம்ளின் மாளிகை இணைய பக்கத்தில் வெளியிட்ட கண்டன அறிக்கையில், ஈரான் மக்களுக்கும், தலைமைக்கும் ஏற்பட்ட இழப்பை சுட்டிக்காட்டி ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்திருந்தார். அடுத்த நாளே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடனும் தொலைபேசியில் பேசினார். இஸ்ரேல் செயலுக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார். இத்தனையும் செய்தாலும், ஈரானுக்கு ஆதரவான நிலைப்பாடில் ரஷ்யா ‘நிதானம்’ காட்டுவதை கவனிக்கலாம்.
பின்னணியில் இருக்கும் சூட்சமம் என்ன? – ரஷ்யா கட்டிவரும் நிதானத்தின் பின்னணியில் பல்வேறு காரணங்களும் இருப்பதாகப் பட்டியலிடுகின்றனர் சர்வதேச போர்ச்சூழல் ஆய்வாளர்கள். ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவை சாமானியனின் பார்வையில் சொல்ல வேண்டுமானால் ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்று கூறலாம். ஈரான், ரஷ்யா இரண்டு நாடுகளுமே மேற்கத்திய உலக நாடுகளால் அளவில் அடங்காத பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளானவை.
இந்தச் சூழலில் கடந்த 2022 பிப்ரவரியில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதலை தொடங்கியபோது ரஷ்யாவுக்கு ஈரான் பெருமளவில் ஆயுத உதவி செய்தது. குறிப்பாக, ராணுவ ட்ரோன்களை வழங்கியது. இதற்கு பிரதி உபகாரமாக ஈரானுக்கு ரஷ்யா 1.8 டன் தங்கத்தை (சுமார் 104 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு) கொடுத்ததாக செய்திகள் உண்டு. ஊடகக் குறிப்புகள் மாஸ்கோ அதனை ஈரானிய நிறுவனமான சஹாரா தண்டர் மூலம் ஈரானுக்கு வழங்கியதாகவும் தகவல் வெளியிட்டன. இதுமட்டுமல்லாது ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு ரஷ்யா உதவியதாகவும் தகவல் உண்டு,
இது ஒருபுறம் இருக்க, ரஷ்யா சர்வதேச அரங்கில் பெரும் பலமாகக் கருதும் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் ஈரான் அண்மையில் இணைந்தது. இதில் மேற்கத்திய நாடுகளாக அல்லாத வளர்ந்துவரும் பொருளாதார சக்திகள் உள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பு ரஷ்யாவுக்கு மிகவும் முக்கியமானதாகவே இருக்கிறது. ரஷ்யாவுக்கு ஈரான் நம்பகத்தன்மை வாய்ந்த நண்பனாக இருக்கிறது. இந்தச் சூழலில் ஈரானுக்கு ஆயுத உதவி செய்து, அதனை முழுவீச்சில் போரில் ஈடுபடச் செய்வது என்பது, தனக்கான ஒரு முக்கிய பங்குதாரரை இழப்பதாகவே இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சண்டையிடலாம், போரும் செய்யலாம், ஆனால் வரம்பு மீறிவிடக் கூடாது என்ற கோட்பாட்டின்படியே ரஷ்யா இருப்பதாகவும் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
பலன் அளிக்காத ஒப்பந்தம்: பொதுவாகவே இரு நாட்டு நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது வழக்கம். அப்படியாக, இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் மிகவும் நுணுக்கமாக, சில நேரங்களில் தந்திரமானதாகவே இருக்கின்றன. அப்படியான ஒன்றுதான் ஈரான் – ரஷ்யா இடையே ஜனவரில் கையெழுத்தான ஒப்பந்தம்.
மேற்கத்திய தடைகளை எதிர்கொண்டு தங்கள் உறவுகளை வலுப்படுத்த ரஷ்யாவும் ஈரானும் கையெழுத்திட்ட அந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் தாக்குதலுக்கு உள்ளானால் பரஸ்பரம் ராணுவ உதவி செய்வோம் என்ற உடன்படிக்கை ஏதும் எட்டப்படவில்லை. ஈரானோ, ரஷ்யாவோ தாக்கப்பட்டால் இரு தரப்பும் எதிர் தரப்புக்கு எவ்விதத்திலும் உதவக் கூடாது என்ற ஒப்பந்தம் மட்டும் இருக்கிறது. இந்த நுட்பத்தால்தான் இப்போது ஈரானுக்கு ரஷ்யா ராணுவ உதவி செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இல்லை.
உடன்படிக்கைகளின்படி மட்டுமே எந்த நாடும் நடந்து கொள்வதில்லை என்பதால் திரைமறைவில் ஈரானுக்கு ரஷ்யா ஏதேனும் உதவி செய்தாலும் கூட நேரடியாக எந்தவிதத்திலும் ராணுவ உதவிகளைச் செய்ய வாய்ப்பிலை என்பதே நிதர்சனம். உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், முன் எப்போதும் இல்லாத ஒரு புதுவித நெருக்கத்தை வாஷிங்டனுடன் ரஷ்யா காட்டி வருகிறது. இத்தகையச் சூழலில் ஈரானுக்கு ரஷ்யா நேரடியாக ராணுவ உதவிகளைச் செய்வது ரஷ்ய வெளியுறவுக் கொள்கையில் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும்.
ரஷ்யாவுக்கு புதிய அவதார வாய்ப்பு: நேரடி உதவியும் இல்லை, ஈரானைக் கைவிடப் போவதும் இல்லை என்ற சூழலில் ரஷ்யாவுக்கு ஒரு புதிய அவதார வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அது ஈரான் – அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்யும் அவதாரம். ஏற்கெனவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்நாட்டு ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில், இஸ்ரேல் – ஈரான் மோதலில் ரஷ்யா மத்தியஸ்தம் செய்வதை திறந்த மனதுடன் ஏற்பதாகக் கூறியிருந்தார். அமெரிக்கா விஷயத்தில் ஈரானை யாரும் சமரசம் செய்ய முடியாது என்றாலும் கூட இரு நாடுகளுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்த ரஷ்யாவால் ஒரு பாலமாக இருக்க முடியும்.
ஒருபக்கம் உக்ரைனில் தாக்குதலை மூன்றாண்டுகளாக நடத்திக் கொண்டு, மறுபுறம் மத்திய கிழக்கு பிராந்திய அமைதிக்காக ஈரானை பேச்சுவார்த்தைக்கு ஊக்குவிக்கும் பணியை ரஷ்யா மேற்கொள்வது எத்தனை முரணான விஷயமாக இருக்கும்?!
ஆனால், கடந்த ஏப்ரலில் அமெரிக்கா – ஈரான் இடையேயான மறைமுகப் பேச்சுவார்த்தையில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சில் ரஷ்யா முக்கியப் பங்காற்றும் சூழலில் இருந்தது. ஈரானிடம் குவிந்துள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சேகரித்து வைக்க மாஸ்கோ ஓர் முனையமாகவும் கருதப்பட்டது. திடீர் இணக்கம் காட்டும் அமெரிக்கா, அத்தகைய ஒப்பந்தங்கள் எட்டப்பட்டால் என்ன மாதிரி நடந்துகொள்ளும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டவை.
உலகப் பார்வையில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு: இவ்வாறாக பொருளாதார, வெளியுறவு கொள்கை சார்ந்த, ராஜதந்திர ரீதியிலான ஒத்துழைப்புகளைக் கடந்து ஈரானுக்கு ரஷ்யா ஆயுத உதவி செய்யாததற்கு காரணம், உலகமே ஈரான் – இஸ்ரேலை கவனித்துக் கொண்டிருக்கும் வேளையில், தனது படைபலங்களைப் பயன்படுத்தி உக்ரைன்னுக்குள் மேலும் முன்னேறலாம் என்ற கணக்கும் இருக்கிறது. இது ஒரு திசை திருப்பும் அரசியலாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், உக்ரைனின் கீவ் நகரின் மீது சமீபத்திய மாதங்களில் இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமை ஒரு தாக்குதலை நிகழ்த்தியுள்ளது ரஷ்யா. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

நடக்கும் சூழலை சாதகமாக்கிக் கொண்டு உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதா? அல்லது க்ரெம்ளின் நலனுக்காக மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் உக்ரைன் மீதான தாக்குதலை கண்டு கொள்ளாமல் இருக்கிறதா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.
கச்சா எண்ணெய்யால் கல்லா கட்டலாம்: இஸ்ரேல் – ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில், ரஷ்யாவில் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கல்லா கட்ட் முடியும். இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக சரக்கு போக்குவரத்து தடைபட வாய்ப்பு உள்ளது. இதனால் பாதிக்கப்படும் நாடுகள், ரஷ்யாவின் கதவுகளைத் தட்டும். உக்ரைனுக்கு எதிரான போரை தொடரவும், போரினால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டவும், இந்த கல்லா கட்டுதல் ரஷ்யாவுக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு பல்வேறு காரணங்களாலும் ஈரான் விஷயத்தில் ரஷ்யா நிதானம் காட்டி வருகிறது.

அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரானும் பதிலடி தாக்குதலில் இறங்கியது. இரு தரப்பும் 6-வது நாளாக இன்றும் பரஸ்பரம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. போர் தொடங்கியதில் இருந்தே இஸ்ரேலுக்காக அதிகாரபூர்வமாக ஆதரவுக் குரல் கொடுத்து வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்க ராணுவத்தை ஈடுபடுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மிரட்டி வருகிறார்.
அதேவேளையில், ரஷ்ய அதிபர் புதினோ அதிகாரபூர்வ அறிவிப்புகளை வெளியிடுவதிலும் ‘நிதானமோ நிதானம்’ காத்து வருகிறார். அமெரிக்காவின் நகர்வுகளை அறிந்த பின்னர், போரின் ஆறாவது நாளில்தான் சம்பிரதாயமாக ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது ரஷ்யா. அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், “இஸ்ரேலுக்கு நேரடி அமெரிக்க ராணுவ உதவி வழங்குவது மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும். இஸ்ரேலுக்கு நேரடி ராணுவ உதவி அல்லது அத்தகைய நடவடிக்கைகளை அமெரிக்கா கருத்தில் கொள்ளக் கூடாது. இது முழு சூழ்நிலையையும் தீவிரமாக சீர்குலைக்கும் ஒரு படியாக இருக்கும்” என்றதும் கவனிக்கத்தக்கது.
முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் போல் அல்ல நவீன கால போர்கள். இந்தப் போர்களின் போக்கு வித்தியாசமானது, வீச்சு பெரிது. அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் பெரிதினும், பெரிது. ஒரு சதுரங்கப் போட்டியில் லாவகமாக காய் நகர்த்தி யாரை தூக்க வேண்டும், யாரைத் தக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டே காய் நகர்த்திவிட்டு ஒரு கட்டத்தில் போட்டியை முடிக்க விடாமல், ஏன் டிராவுக்குக் கூட கொண்டுவராமல் வைத்திருந்தால் எப்படியிருக்கும். அப்படியொரு நகர்வை நோக்கித்தான் நவீன கால போர்கள் நடைபெறுகின்றன. சில மோதல்கள் முடிவடையாமல் பார்த்துக் கொள்ளப்படுவதும் போர் அரசியலின் அதிநுட்பம்.