இஸ்ரேல் தாக்குதலில் முக்கிய அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்ட நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்னர் விஞ்ஞானி மொசென் பக்ரிஜாதே கொல்லப்பட்ட விதத்தை ஈரான் மக்கள் இன்னும் மறக்காமல் உள்ளனர்.
ஈரான் அணுஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதை அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் விரும்பவில்லை. அதனால் கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே ஈரானுக்கு பல்வேறு நெருக்கடிகளை அமெரிக்கா கொடுத்து வருகிறது. இஸ்ரேலும் தன் பங்குக்கு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ஈரான் – இஸ்ரேல் மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் முக்கியமானவர் பெரீடவுன் அப்பாஸி. இவர் ஈரான் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்தவர்.
ஈரானின் அணுசக்தி துறையில் முக்கியமானவராக இருந்ததால், எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்று அவரை எச்சரித்தனர். அதை கேட்டு அவர் சிரித்துள்ளார். அத்துடன், “அணு ஆயுதம் தயாரிக்க என்னை ஈரான் அரசு கேட்டுக் கொண்டால், மகிழ்ச்சியுடன் தயாரிப்பேன்” என்று அவர் கூறிய வார்த்தை மிகவும் பிரபலமானது. எல்லோரும் எதிர்பார்த்தது போலவே, கடந்த 2010-ம் ஆண்டு அப்பாஸியை கொல்ல முயற்சி நடந்தது. அப்போது அவர் தப்பி விட்டார். ஆனால், இந்த முறை இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் தற்போது விஞ்ஞானி மொசென் பக்ரிஜாதே படுகொலையை மீண்டும் நினைவுப்படுத்தி உள்ளது.
விஞ்ஞானி மொசென் பக்ரிஜாதேவை ஈரானின் அணுசக்தி தந்தை என்றே மேற்கத்திய நாடுகளும் இஸ்ரேலும் கூறிவந்தன. அந்தளவுக்கு மிக முக்கியமானவராக இருந்தார். இவர்தான் ஈரானின் “புராஜெக்ட் அமாத்” திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர் என்று மேற்கத்திய உளவு அமைப்புகள் நம்பின. அணு ஆயுதம், ஏவுகணை, அதிநவீன ஆயுதங்கள் தயாரிப்பதுதான் இந்த திட்டம். அதனால், கடந்த 2000-ம் ஆண்டுகளில் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாக மேற்கத்திய நாடுகள் பரபரப்பாக பேசின. அத்துடன் அமெரிக்க விஞ்ஞானி ராபர்ட் ஓபன் ஹீமருடன், ஈரான் விஞ்ஞானி மொசெனை ஒப்பிட்டு செய்திகள் வெளியாயின.
இத்தனைக்கும் மொசென் வெளிவுலகுக்கு வராதவர். ஊடகங்கள் எதிலும் பேட்டி அளிக்காதவர். இன்னும் சொல்ல போனால், அவரது புகைப்படம் கூட அவ்வளவாக வெளியில் வந்ததில்லை. எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காதவர். மிகமிக ரகசிய நடவடிக்கைகளில் மட்டுமே இருந்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டது. அப்போது சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனுடன் சேர்ந்து ஈரானும் கையெழுத்திட்டது. அதன்படி, அணு ஆயுத தயாரிப்புக்கு ஈரானுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்போது கூட விஞ்ஞானி மொசெனின் பெயர் அடிபடவில்லை.
அதன்பின், கடந்த 2018-ம் ஆண்டுதான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய போது முதன் முதலில் ஈரான் விஞ்ஞானி மொசென் பெயரை வெளியிட்டார். அதன் பிறகுதான் அவர் மீது குறி வைக்கப்பட்டது. திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். ஆனால், அவர் கொல்லப்பட்ட விதத்தை இன்று வரை ஈரான் மக்கள் மட்டுமல்ல வெளிநாட்டவர்களும் ஆச்சரியத்துடன் நினைவுகூர்கின்றனர். அவரை கொன்றது யார் என்பது இன்று வரை மர்மம்தான். ஆனால், இஸ்ரேல்தான் கொன்றது. அதற்கு பதிலடி தருவோம் என்று ஈரான் அப்போதே உறுதியாக கூறியது.
கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி… ஈரானின் அப்சார்ட் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டுக்கு மனைவி, பாதுகாவலர்களுடன் விஞ்ஞானி மொசென் காரில் சென்று கொண்டிருந்தார். தலைநகர் டெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் அப்சார்ட் அமைந்துள்ளது. அவர் வழக்கமாக செல்லும் பாதையில்தான் கார் சென்றது. சற்று தூரத்தில் அவரது பாதுகாப்பு வாகனம் பின்தொடர்ந்தது. அந்த பாதையில் சாலையோரம் ஒரு டிரக் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த டிரக்கில் யாரும் இல்லை. ஆனால் அந்த டிரக்கில் முகத்தை அடையாளம் காணும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் டிரக்கில் இயந்திர துப்பாக்கி, வெடிபொருட்களும் இருந்துள்ளன. அந்த துப்பாக்கி செயற்கைக் கோள் மூலம் இணைக்கப்பட்டிருந்தது. சாலையில் வேறு தீவிரவாதிகளோ, உளவாளிகளோ இல்லை.
விஞ்ஞானி மொசென் கார் டிரக் அருகில் சென்ற போது, நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. உடனே காரின் வேகம் குறைக்கப்பட்டது. அப்போது டிரக்கில் இருந்து சரமாரியாக துப்பாக்கிக் குண்டுகள் கார் மீது பாய்ந்தன. அதில், கார் தடுமாறி வளைவாக சென்று சாலையில் நின்றது. பின்னர் 2-வது முறையாக துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. அதில் மொசென் தோளில் ஒரு குண்டு பாய்ந்தது. உடனே கீழே இறங்கிய மொசென், கார் கதவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டார். எனினும், அவரது முதுகில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. சாலையில் சரிந்து விழுந்த மொசென் உயிரிழந்தார். அடுத்த சில விநாடிகளில் சாலையோரம் நின்றிருந்த டிரக்கும் வெடித்து சிதறியது.
அவருக்கு அருகில் இருந்த அவரது மனைவி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. மொசென் மீது மட்டும் 15 குண்டுகள் பாய்ந்துள்ளதாக ஈரான் கூறியது. இந்த தாக்குதல் முழுவதும் ஒரு நிமிடத்துக்குள் நடந்தது முடிந்தது, ஈரானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரானுக்கு வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் இயந்திர துப்பாக்கியை இயக்க செய்து மொசெனை இஸ்ரேல் கொன்றதாக ஈரான் அதிகாரிகள் பின்னர் குற்றம் சாட்டினர். மேலும், படுகொலை நடந்த பாணியை பார்க்கும் போது இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பின் கைவரிசை இருப்பதாக ஈரான் உறுதியாக கூறியது.
அதற்கு சில நாட்கள் பிறகு பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. விஞ்ஞானி மொசெனை பல மாதங்களாகவே இஸ்ரேல் கண்காணித்து வந்துள்ளது. அவரை கொல்வதற்காக பல்வேறு ஆயுதங்களை உதிரி பாகங்களாக ஈரானுக்குள் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத் கடத்தி சென்றுள்ளது. அங்கு அவற்றை இணைத்து ரகசியமாக சோதனையும் செய்து பார்த்துள்ளது என்று தகவல்கள் வெளியாயின. உலக வரலாற்றிலேயே செயற்கைக் கோள் மூலம் ஆயுதங்களை இயக்கி நடத்திய தாக்குதல் அதுவே முதல் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஈரான் புரட்சிப் படை பிரிகேடியர் ஜெனரல் அலி படாவி கூறும்போது, “விஞ்ஞானி மொசெனை மட்டும் துல்லியமாக குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவருடன் சென்ற மனைவி மற்றும் பாதுகாவலர்களுக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லை” என்றார். எனவே, விஞ்ஞானி மொசென் படுகொலை இன்று வரை பேசப்படுகிறது.