தெஹ்ரான்: தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தொடரும் நிலையில், அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று அந்நாட்டின் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “அமெரிக்கர்கள் பேச்சுவார்த்தைகளுக்கு தீவிரமாக அழைப்பு விடுக்கும் செய்திகளை பலமுறை அனுப்பி வருகின்றனர். ஆனால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் நிற்காத வரை, ராஜதந்திரம் மற்றும் உரையாடலுக்கு இடமில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். இஸ்ரேலுக்கு எதிரான நமது எதிர்வினைக்குப் பிறகு, இதுபோன்ற நாடுகள் ஆக்கிரமிப்பில் இருந்து தங்களை தூர விலக்கிக் கொள்ளும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.
இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 8-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், ஈரானின் அணுசக்தித் திட்டம் விவகாரத்தில் மோதலைத் தணிக்க முயலும் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்திப்பதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவுக்கு வந்துள்ளார். கடந்த வாரம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியபோது திட்டமிடப்பட்ட சந்திப்பு இதுவாகும்.
ஜெனீவாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி, வியாழக்கிழமை வாஷிங்டனில் மூத்த அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்த பிறகு, “அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஒரு ராஜதந்திர தீர்வை எட்டுவதற்கான ஒரு நம்பிக்கை இப்போது உள்ளது” என்று கூறினார்.
ட்ரம்ப் ‘முடிவு’ எப்போது? – இதனிடையே, அடுத்த இரண்டு வாரங்களில் இஸ்ரேல் – ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஊடகப் பிரிவு செயலாளர் கரோலின் லீவிட், “எதிர்காலத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமா, வேண்டாமா என்ற விவகாரத்தில் கணிசமான வாய்ப்பு உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்தப் பிரச்சினைக்குள் செல்லலாமா வேண்டாமா என்பதை நான் முடிவெடுப்பேன் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் ட்ரம்ப் ஒரு ராஜதந்திர தீர்வைத் தொடர ஆர்வமாக இருந்தார். ஆனால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே அமெரிக்காவின் முதன்மையான முன்னுரிமை. எந்தவொரு ஒப்பந்தமும் தெஹ்ரான் யுரேனியத்தை செறிவூட்டுவதை தடைசெய்து, ஈரானின் அணு ஆயுதத்தை அடையும் திறனை தடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
ட்ரம்ப் எப்போதும் ஒரு ராஜதந்திர தீர்வில் ஆர்வமாக உள்ளார், அவர் ஓர் அமைதியை உருவாக்குபவர். அவர் வலிமையின் மூலம் அமைதியை உருவாக்குபவர். எனவே, ராஜதந்திரத்துக்கான வாய்ப்பு இருந்தால், ட்ரம்ப் எப்போதும் அதைப் பெறுவார். அதே நேரத்தில் பலத்தைப் பயன்படுத்தவும் அவர் பயப்படவில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளை நிறுத்த ஈரான் ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்த நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்றது குறிப்பிடத்தக்கது.