சென்னை: மனைவி பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ தேவையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ரேவதி என்பவர், தனக்கு பாஸ்போர்ட் கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். திருமணமான ரேவதியின் விண்ணப்பத்தில் அவரது கணவரின் கையெழுத்து இல்லை என்பதால், கணவரின் கையெழுத்தை பெற்று வந்தால் மட்டுமே அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்தார்.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரேவதி வழக்கு தொடர்ந்தார். அதில், “கருத்து வேறுபாடு காரணமாக கணவரும், தானும் பிரிந்துவிட்ட நிலையில், விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, கணவரின் கையெழுத்தை கோராமல் தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், திருமணமான பெண், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, அவரது கையெழுத்தோ பெற வேண்டிய அவசியம் இல்லை. கணவரின் கையெழுத்து பெற்று வந்தால் மட்டுமே விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்ற பாஸ்போர்ட் அதிகாரியின் போக்கு ஒரு பெண்ணை கணவரின் உடமையாக கருதும் ஆணாதிக்க மனப்பான்மையையே காட்டுகிறது.
திருமணமாகி விட்டால் பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவது இல்லை. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட கணவரிடமிருந்து மனைவி கையெழுத்து பெற்று வருவது என்பது இயலாத காரியம். எனவே, மனுதாரருக்கு 4 வார காலத்துக்குள் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.