வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மிக உயரமான சிகரம் மவுண்ட் தெனாலி எனும் மலைச்சிகரத்தை ஏறியதால், உலகின் ஏழு கண்டங்களில் உள்ள சிகரங்களில் ஏறிய முதல் தமிழ் பெண் என்கின்ற ஒரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளார் முத்தமிழ் செல்வி.

விருதுநகர் மாவட்டம், ஜோகில் பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி. இவருக்குத் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது குடும்பத்துடன் சென்னை தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார்.
ஜப்பானிய மொழிபெயர்ப்பாளராகவும், ஆசிரியராகவும் பணிபுரியும் இவருக்கு, விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் சிறு வயதிலிருந்தது. இதுவே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனைகளை மேற்கொள்ளத் தூண்டுதலாக இருந்துள்ளது.

அப்படி இருக்க உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள மலைச்சிகரங்களை அடைய வேண்டும் என்கின்ற ஒரு எண்ணம் அவருக்குத் தோன்றியது.
அதனால், 2023 ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய மலைச் சிகரமான, 8,848.86 மீட்டர் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்.
இதன் காரணமாக, தமிழ்நாட்டிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் பெண் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார். இதன் தொடர்ச்சியாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் உள்ள சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
அப்போது, இந்த முயற்சிக்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி அடுத்த முயற்சிகளுக்கான உதவிகளை தமிழக அரசு செய்வதற்கான உறுதியையும் வழங்கினார்.

வட அமெரிக்காவில் 6,144 மீட்டர் மவுண்ட் தெனாலி உயரமுள்ள என்கின்ற மலைச்சிகரத்தை ஏறி சாதனை படைத்தது குறித்து அவரிடம் தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசினோம்.
அப்போது, “நான் ஒரு வருடத்திலேயே ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களையும் ஏறி சாதனை படைக்க முயற்சி செய்தேன். அப்படி ஒரு வருடத்தில், ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை ஏறி சாதனை படைத்தால், இந்திய அளவில் முதலிடமும், உலக அளவில் மூன்றாம் இடமும் பெறுவேன்.
தற்போது இரண்டு வருடத்தில் அந்த சாதனையைச் செய்துள்ளதால் இந்திய அளவில் முதலிடமும் தமிழகத்திலிருந்து ஏழு கண்டங்களில் உள்ள சிகரங்களிலும் ஏறிய முதல் தமிழ் பெண் எனவும் பெயர் பெற்று உள்ளேன்” எனத் தெரிவித்தார்.