புதுடெல்லி: ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, போரின் தீவிரத்தைக் குறைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தியுள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வந்த நிலையில், இன்று திடீரென அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபருடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, சமீபத்திய பதற்றங்கள் குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நரேந்திர மோடி, நீண்டகால பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு போரின் தீவிரத்தை குறைப்பது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷஷ்கியனுடன் பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதித்தோம். சமீபத்திய மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினேன். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கும், நிலைமையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், உடனடியாக போரின் தீவிரத்தைக் குறைத்து, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வுக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்தினேன்.” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்: ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை சீனா கண்டித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அமைச்சகத்தின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களை சீனா கடுமையாகக் கண்டிக்கிறது. இது ஐ.நா. சாசனத்தின் கடுமையான மீறல். இது மேற்கு ஆசியாவில் பதட்டங்களை அதிகரித்துள்ளது.
மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர், குறிப்பாக இஸ்ரேல், விரைவாக போர் நிறுத்தத்தில் ஈடுபடவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் பெய்ஜிங் அழைப்பு விடுக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்: ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பொறுப்பற்றது என ரஷ்யா கண்டித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்த வாதங்கள் பயன்படுத்தப்பட்டாலும், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் பிரதேசத்தை ஏவுகணை மற்றும் வெடிகுண்டுகள் மூலம் தாக்குவது பொறுப்பற்ற முடிவு. சர்வதேச சட்டம், ஐ.நா. சாசனம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை கடுமையாக மீறும் செயல் இது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக உள்ள ஒரு நாடு, இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது ஆபத்தானது” என்று குறிப்பிட்டுள்ளது.