வாக்குப்பதிவு தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிடுவது வாக்காளர்களின் அந்தரங்க உரிமைக்கு முரணானது என ராகுல் காந்தி கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் உட்பட சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் வெளியிட தேர்தல் ஆணையம் மறுக்கிறது. இதுபோல வாக்குப் பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து விடுமாறும் உத்தரவிட்டுள்ளது. இது ஆதாரங்களை அழிக்கும் செயல். இதன்மூலம் வெற்றியை முன்கூட்டியே தீர்மாணித்திருப்பது தெளிவாகிறது. இது ஜனநாயகத்துக்கு விஷம் போன்றது” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாக்குப் பதிவு மையங்களில் வாக்குப் பதிவின்போது எடுக்கப்படும் சிசிடிவி காட்சிகள் 45 நாட்களுக்கு சேமித்து வைக்கப்படுகின்றன. புகார்கள் ஏதேனும் வந்தால் ஆய்வு செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 45 நாட்களுக்கு பிறகு அந்த காட்சிகளை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரம், தேர்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்டால் குறிப்பிட்ட மையத்தின் காட்சிகள் மட்டும் சமர்ப்பிக்கப்படும். உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், இந்த காட்சிகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று கோருவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. வாக்காளர்களின் அந்தரங்க உரிமைக்கு முரணானது.
வாக்குப்பதிவின்போது பதிவாகும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டால், வாக்காளர்களுக்கு சமூக விரோத சக்திகளால் அச்சுறுத்தல் ஏற்பட வழிவகுக்கும். உதாரணமாக குறைவான வாக்குகளைப் பெற்ற ஒரு வேட்பாளர், சிசிடிவி காட்சிகளைப் பார்த்து யார் யாரெல்லாம் தங்களுக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள் என்பதை அடையாளம் காண முடியும் இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களை துன்புறுத்த வாய்ப்பு ஏற்படும். எனவே, இந்த காட்சிகள் வெளியிடப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.