புதுடெல்லி: இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளதையடுத்து ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் சிந்து நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
அதன் முதல்கட்டமாக 110 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் விமானம் வியாழக்கிழமை காலை டெல்லியை வந்தடைந்தது. ஈரானில் இருந்து திரும்பியவர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர் மீர் கலிப் கூறுகையில், “ வானில் இஸ்ரேல் ஏவிய ஏவுகணைகளை அதிர்ச்சியுடன் பார்த்தோம். அதேபோன்று அவர்கள் வீசிய குண்டுகள் அருகில் இருந்த கட்டிடங்கள் மீது விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தன. நாங்கள் மிகவும் பதறிப்போனோம். ஈரானில் ஏற்பட்ட அனுபவம் ஒரு கனவைப் போல உள்ளது. எங்களை மீட்டுக் கொண்டு வந்த மத்திய அரசுக்கு நன்றி” என்றார்.
காஷ்மீரைச் சேர்ந்த மாணவி வர்தா தான் அனுபவித்த பயத்தை நினைவு கூறும்போது, “ ஈரானில் நிலைமை மோசமாக உள்ளது. அங்கிருந்து முதலில் வெளியேற்றப்பட்டவர்கள் நாங்கள்தான். எங்களை இங்கு கொண்டு வர மிக விரைவாக செயல்பட்ட இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய தூதரகத்திற்கும் நன்றி. இந்திய அரசு எங்களை காப்பாற்ற வந்தபோது நாங்கள் வீட்டில் இருப்பதை போல உணர்ந்தோம்” என்றார்.
ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர்கள் உட்பட 90 மாணவர்கள் இந்த வார தொடக்கத்தில் போர் காரணமாக பாதுகாப்பு கருதி டெஹ்ரானில் இருந்து ஆர்மீனியாவுக்கு மாற்றப்பட்டனர். அதன்பிறகு அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து வர ஆபரேஷன் சிந்துவின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த மீட்புப் பணிகளை இந்திய தூதரகம் ஒருங்கிணைத்து வருகிறது.