ருத்ரபிரயாக்: உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் நடைபாதையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இருவர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் மலையேற்றப் பாதையில் ஜங்கில்சாட்டி காட் அருகே நேற்று காலை 11.20 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் அவ்வழியே சென்ற பக்தர்கள் மற்றும் போர்ட்டர்கள் இடிபாடுகளில் சிக்கி ஒரு பள்ளத்தாக்கில் விழுந்தனர். தகவல் அறிந்த காவல்துறை மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உள்ளூர் மக்கள் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில் இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் காயம் அடைந்த ஒரு பெண் உள்ளிட்ட மூவர் மீட்கப்பட்டு கவுரிகுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.