விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.க.பாண்டியராஜன் கூறுகையில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி அதிமுக ஆட்சி காலத்தில் சிஏபி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இது அதிமுகவிற்கான ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது. இதே போல் தமிழகம் முழுவதும் தற்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக அரசின் தொல்லியல் ஆணையர் உதயச்சந்திரன் ஆகியோர் கூடுதல் கவனம் செலுத்தினால், அந்த அகழ்வாராய்ச்சி நடக்கும் இடங்களில் உள்ள உண்மைகள் வெளியில் வரும்.

`தமிழர் நாகரிகம்’
அதேபோல் வைகை நாகரிகத்தில் எங்களது ஆட்சி காலத்தில் செய்த அகழ்வாராட்சியில் வெளிவந்த உண்மைகள் அதிகம். இதுவரை 39 ஆய்வுகள் நடந்துள்ளது. மேலும் தற்போது 8 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கிடைத்துள்ள அரிய பொருட்களை ஒரு மாலையாக தொடுத்து பாரத நாகரிகத்தின் உண்மையான அடித்தளம் தமிழர் நாகரிகம் என்றும் வெளிக்கொணர வேண்டும்.
ஆனால் புரிதல் இல்லாத தற்போதைய அரசு அந்த முயற்சியில் ஈடுபடாமல் மத்திய அரசுடன் மோதும் போக்கை கொண்டுள்ளது. பட்டரைபெரும்புதூர், அழகன்குளம், கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆய்வுவற்றில் கண்டெடுக்கப்பட்டவைகளை ஒன்றிணைத்து தமிழர்களுடைய நாகரீகம் நதி சார்ந்த நாகரீகம் மற்றும் கடல் சார்ந்த நாகரீகம் என பறைசாற்ற வேண்டும். தமிழ் சமுதாயம் தொழிற்சாலைகளை நடத்தியுள்ளது. விவசாயங்களில் புதுமைகளை புகுத்தியுள்ளது என்பதால் தனித்தனியாக ஆய்வறிக்கைகளை வெளியிடாமல் ஒட்டு மொத்த ஆய்வறிக்கைகளையும் ஒருங்கிணைத்து `தமிழர் நாகரிகம்’ என்று வெளியிடப்பட வேண்டும்.
ஒருங்கிணைந்த அறிக்கையாக வெளியிடப்படவில்லை!
நான்கு ஆண்டுகளாக 21 கோடி ரூபாய் அகழ்வாராய்ச்சிக்கு மட்டும் செலவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக எந்த அகழ்வாராய்ச்சிகளையும் செய்யவில்லை என குற்றம் சாட்டிய திமுகவிற்கு எடப்பாடி பழனிச்சாமி தரவுகளுடன் பதில் தந்த உடன் அதிமுக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் அதைவிட திமுக அதிக ஆய்வுகள் மேற்கொண்டுள்ளது என ஒப்புக் கொண்டுள்ளது.
1968 ல் கலைஞர் கருணாநிதி தான் முதன்முதலாக அகழ்வாராய்ச்சிகளை துவங்கி வைத்தார் என்பதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அது எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் இருந்த ஒருங்கிணைந்த திமுகவாக இருந்தது. அப்போது 5 அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதன் பின் மேற்கொள்ளப்பட்ட 35 ஆய்வுகளுக்கான அறிக்கையை ஏன் வெளியிடப்படவில்லை.

அதேபோல் அகழ்வாராய்ச்சிகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும் பொருட்களை ஒவ்வொரு இடங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மணி, தங்கம், சிலை கிடைத்தது என கூறுவதற்கு பதிலாக ஒருங்கிணைந்த அறிக்கையாக வெளியிடப்படவில்லை. ஒருங்கிணைந்த அகழ்வாராய்ச்சி ஆய்வறிக்கைகளை வெளியிடுவதற்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படி ஒருங்கிணைந்த அறிக்கையாக வெளியிடப்படும் பொழுது காவேரி, தென்பெண்ணை, வைகை தாமிரபரணி, பாலாறு, கடற்கரை நாகரிகம் என ஒட்டுமொத்தத்தையும் வெளியிடப்படும் பொழுது மத்திய அரசு இதில் கேள்வி எழுப்புவதற்கு எந்த ஒரு இடமும் இருக்காது. இவ்வளவு பொருட்செலவு செய்து இந்த அளவிற்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு எந்த மாநிலத்திலும் ஆட்கள் கிடையாது என்ற நிலையை ஏற்படுத்தியது எடப்பாடி பழனிசாமி.
டிஜிட்டல் மியூசியம்:
அதேபோல் தற்போது தொழில் நுட்பங்கள் நிறைந்த உலகமாக உள்ளது. அதனால் ஏன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இந்த இந்த பொருட்கள் கிடைத்துள்ளது. ஏ ஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கிமு 5 ல் எப்படி இருந்தது என்கின்ற தமிழர் நாகரீக டிஜிட்டல் மியூசியத்தை உருவாக்க வேண்டும். கீழடியில் மட்டும் 17 ஆயிரம் அரும்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஆயிரம் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 16 ஆயிரம் அரும்பொருட்கள் காட்சிப்படுத்தப்படவில்லை. இதனை ஆய்வு செய்து மக்களிடம் கொண்டு செல்லும் அளவிற்கு முழு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி தமிழர் பழங்கால நாகரிகம் என்கின்ற ஒரு நல்ல டிஜிட்டல் மியூசியத்தை தற்போது அரசு உருவாக்க வேண்டும். ” என்றார்.

மீண்டும் விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஆசை
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள் என்ற கேள்விக்கு, “கட்சி எந்த இடத்தை சொல்கிறதோ அந்த இடத்தில் போட்டியிடுவேன். ஆனால் நான் விருதுநகர் தான் வாழ்ந்த இடம். இப்போது அந்த இடத்தில் தான் வீடு கட்டி வாழ்ந்து வருகிறேன். இருந்தும் கட்சி எந்த முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன்.” என்றார்.