ஊர்க்காவல் படையினருக்கு பணி நிலைப்பு, ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும்: அன்புமணி

சென்னை: ஊர்க்காவல் படையினருக்கு பணி நிலைப்பு, ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊர்க்காவல் படையினர், தங்களுக்கு பணி நிலைப்பும், ஊதிய உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், அதை நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வருகிறது. பொருளாதாரப் படிநிலையில் கடைசி இடத்தில் இருக்கும் அவர்களின் உரிமையை அரசே பறிப்பது கண்டிக்கத்தக்கது.

அரசுத்துறைகளில் பணியாற்றுபவர்களின் ஊதியம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்க வேண்டும் என்பது தான் இயல்பாகும். ஆனால், ஊர்க்காவல் படையினரின் மாத ஊதியம் மட்டும் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும் உயருவதற்கு பதிலாக குறைந்து கொண்டு வருகிறது.

இந்தியா, சீனா போரைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு உதவும் வகையில் தேசிய அளவில் 1962 ஆம் ஆண்டிலும், தமிழகத்தில் 1963 ஆம் ஆண்டிலும் தொடங்கப்பட்ட ஊர்க்காவல் படையில் பணி செய்பவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு வரை ஒருநாள் ஊதியமாக ரூ.67 மட்டும் தான் வழங்கப்பட்டு வந்தது. அந்த ஆண்டில் அவர்களுக்கான ஊதியம் ரூ.152 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆனாலும், மாத ஊதியம் 2800 ரூபாயைத் தாண்டாமல் அரசு பார்த்துக்கொண்டது.

ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது. அதன்படியே அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி 2017 ஆம் ஆண்டில் ஆணையிட்ட தமிழக அரசு, அவர்களின் அதிகாரப்பூர்வ பணி நாட்களின் எண்ணிக்கையை ஐந்து நாட்களாக குறைத்துவிட்டது. அதனால், அவர்களின் மாத ஊதியம் ரூ.2800-லிருந்து உயரவில்லை.

மாதத்திற்கு 5 நாள்கள் வேலை போதுமானதல்ல என்றும், பணி நாள்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும் ஊர்க்காவல்படையினர் கோரிக்கை விடுத்த நிலையில், பணி நாள்களின் எண்ணிக்கையை 10 ஆக 2019&ஆம் ஆண்டில் உயர்த்திய தமிழக அரசு, பணி நேரத்தின் அளவை 4 மணி நேரமாகவும், ஊதியத்தை ரூ.280 ஆகவும் குறைத்து விட்டது. அதனால், மாதத்திற்கு 10 நாள்கள் பணி செய்தாலும், அதே ரூ.2,800 மட்டும் தான் ஊதியமாக கிடைத்தது.

இதுதவிர அதிகாரப்பூர்மற்ற வகையில் பல நாள்கள் அவர்களுக்கு பணி வழங்கப்பட்டாலும் கூட அதற்காக ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை. இப்படியாக உச்சநீதிமன்றமே ஆணையிட்டாலும் மாத ஊதியத்தை ரூ.2800-க்கும் மேல் உயர்த்த தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இதற்காக பல ஏமாற்று வேலைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

ஊர்க்காவல் படையினரின் ஒரு நாள் ஊதியம் உயர்த்தப்பட்டாலும் கூட, பணி நாள்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, மாத ஊதியத்தை உயர்த்த தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் மறுப்பதை சுட்டிக்காட்டி ஊர்க்காவல் படையினர் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகினார்கள்.

அந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம், ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும்; மாத ஊதியமாக ரூ.16,800 என்று ஆணையிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை ஆந்திரா, ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்படும் போதிலும், தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் கிட்டத்தட்ட காவல்துறையினருக்கு இணையாக ஊர்க்காவல் படையினருக்கும் பங்கு இருக்கிறது. திருவிழாக்கள், போராட்டங்கள், வன்முறைகள் மற்றும் எதிர்பாராத வகையில் ஏற்படும் நெருக்கடியான சூழல்களில் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையினருக்கு உதவியாக இருப்பவர்கள் ஊர்க்காவல் படையினர் ஆவர். பெயரளவில் இந்த அமைப்பு காவல்துறைக்கு துணை அமைப்பு என்றாலும், கள அளவில் இவர்கள் காவல்துறைக்கு இணையாகவே செயல்பட்டு வருகின்றனர்.

காவல்துறையில் அதிகரித்துக்கொண்டே செல்லும் காலியிடங்கள், பெருகி வரும் காவல்பணி தேவைகள் ஆகியவற்றைக்கொண்டு பார்க்கும்போது ஊர்க்காவல் படையின் சேவை ஒவ்வொரு நாளும் தேவை. இது காவல்துறையின் அனைத்து நிலை அதிகாரிகளும் ஒப்புக்கொண்ட உண்மை.

தமிழக காவல்துறையின் ஊர்க்காவல் படைப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர், ஊர்க்காவல் படையினரின் பணி நாட்களையும், மாத ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரைத்திருந்தார். அதனடிப்படையில், ஊர்க்காவல் படையினரின் ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் ஏமாற்றம் மட்டும் தான் பரிசாகக் கிடைத்தது. ஊர்க்காவல் படையினரும் வேதனை தொடர்கிறது.

தமிழ்நாட்டில் ஊர்காவல் படையில், 15,622 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவருமே, கடந்த 15 ஆண்டுகளாக ஊர்காவல் படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 90 விழுக்காட்டினர் இதை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.2,800 என்பது எந்த வகையிலும் போதுமானதல்ல. அவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஆணையிட்ட பிறகும் அதை செயல்படுத்த மாட்டோம் என மாநில அரசு பிடிவாதம் பிடிப்பது சரியல்ல.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில்,‘‘காவல்துறையினருக்கு பல வகையிலும் உறுதுணையாக நிற்கும் ஊர்க்காவல் படையினரின் நலன் காக்கும் நோக்குடன் அவர்களின் பணி நாள்கள் உயர்த்தப்படும்; ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மற்ற வாக்குறுதிகளைப் போலவே இந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது. இது மிக மோசமான துரோகம். நாட்டைக் காக்க பாடுபடும் ஊர்க்காவல் படையினருக்கு இனியும் துரோகம் செய்யக்கூடாது. உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவாறு ஊர்க்காவல் படையினரின் ஊதியத்தை உயர்த்தி வழங்குவதுடன், அவர்களுக்கு பணி நிலைப்பும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.