டெல் அவிவ்: போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பின்னர், தங்கள் நாடு மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ள இஸ்ரேல், பதிலடி தாக்குதல்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், போர் நிறுத்தம் தொடங்கிய பின்னர் எந்த தாக்குதலும் நடத்தவில்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் இன்று 12-வது நாளை எட்டிய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முன்மொழிவின் பேரில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.
இந்த நிலையில், ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. ஈரானிலிருந்து இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்திய நிலையில், பல இஸ்ரேல் நகரங்களில் சைரன்கள் ஒலித்தன. இதனால் டெல் அவிவில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பேசிய இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், “அமெரிக்க அதிபர் அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெளிப்படையாக மீறியுள்ள ஈரான், இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசியுள்ளது. போர்நிறுத்த மீறலுக்கு பதிலளிக்கும் எங்களின் கொள்கையின்படி, ஈரானில் உள்ள அரசு சொத்துக்கள் மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து அதிதீவிர நடவடிக்கைகளைத் தொடர நான் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்” என்று கூறினார்.
இருப்பினும் இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஈரான் உறுதியாக மறுத்துள்ளது. போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பின்னர் இஸ்ரேல் மீது எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.