புதுடெல்லி: இஸ்ரேல் உடனான மோதலில் தங்கள் தேசத்துக்கு ஆதரவாக இருந்த இந்திய மக்கள் மற்றும் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது புதுடெல்லியில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகம்.
மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே 12 நாட்கள் மோதல் நீடித்தது. இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நின்றதோடு ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் மீது தாக்குதலும் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் – ஈரான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து புதுடெல்லியில் அமைந்துள்ள ஈரான் தூதரகம் புதன்கிழமை அன்று எக்ஸ் தள பதிவு மூலம் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
அந்தப் பதிவில், “இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அத்துமீறிய தாக்குதலுக்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்தது. இதில் ஈரான் வெற்றி பெற்றது. இத்தருணத்தில், புதுடெல்லியில் அமைந்துள்ள ஈரான் தூதரகம், உன்னத சுதந்திரத்தை விரும்பும் இந்திய தலைவர்கள், மக்கள், அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு சாராத அமைப்புகள், மத மற்றும் ஆன்மிக தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தனிநபர்கள், நிறுவனங்கள் என ஈரானுக்கு ஆதரவாக உங்கள் எல்லோருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்வீட்டின் இறுதியில் ‘ஜெய் ஈரான்… ஜெய் ஹிந்த்…’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் அதிபர், பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்: முன்னதாக, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கடந்த 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினேன். தற்போதைய சூழல் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தோம். சமீபகால பதற்றங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தேன். பதற்றத்தை தணிப்பது, அமைதி பேச்சுவார்த்தை, ராஜதந்திர முயற்சிகள் மூலம் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.
ஈரானில் தங்கியிருந்த இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக அதிபர் மசூத் பெசெஷ்கியனுக்கு நன்றி தெரிவித்தேன். வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தொடர்ந்து இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என்றும் உறுதி மேற்கொள்ளப்பட்டது’ என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Statement of the Embassy of the Islamic Republic of Iran in New Delhi
On the occasion of the Iranian nation’s victory in the face of military aggression by the Zionist regime and the United States, the Embassy of the Islamic Republic of Iran in New Delhi extends its heartfelt…
— Iran in India (@Iran_in_India) June 25, 2025