புதுடெல்லி: இந்திய போர் விமானி அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் வீரர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் எப்-16 போர் விமானம் இந்திய வான்பரப்புக்குள் நுழைய முயன்றது. அப்போது, நமது விமானப்படையின் குழு கேப்டன் அபிநந்தன் வர்தமாணன் மிக்-21 ரக விமானத்தில் இருந்தபடி பாகிஸ்தான் விமானத்தை இடைமறித்து விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார்.
எனினும், அபிநந்தன் பறந்த விமானத்தை பாகிஸ்தான் சுட்டதில் பாராசூட் மூலம் தப்பிய அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியில் விழுந்தார். அவரை அந்நாட்டு ராணுவ வீரர் மேஜர் சையது முய்ஸ் சிறைபிடித்ததாக தகவல் வெளியானது. பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 60 மணி நேரத்துக்குள் அபிந்தன் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் வீரர் சையது முய்ஸ் சிறப்பு சேவைக் குழுவின் 6-வது படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சரார்கோஹா பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் முய்ஸ் உயிரிழந்து விட்டதாக தெஹ்ரீக்-ஐ-தலிபான்-இ-பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பு தெரிவித்துள்ளது.