வாஷிங்டன் டி.சி.,
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகிறது என குற்றம் சாட்டிய இஸ்ரேல் திடீரென கடந்த 13-ந்தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் வெற்றி பெற்றுள்ளது என கூறிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார். அமெரிக்க விமானங்கள் வெற்றியுடன் தாக்குதலை நடத்தி முடித்து, திரும்பி விட்டன என்றார்.
ஆனால், அமெரிக்காவின் சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தியில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணு உலைகள் அழிக்கப்படவில்லை என தெரிவித்து இருந்தது.
அமெரிக்காவின் பாதுகாப்பு உளவு அமைப்பு நடத்திய தொடக்க மதிப்பீட்டில் தாக்குதல்கள் தற்காலிக பாதிப்புகளையே ஏற்படுத்தியது. இதனால், ஈரான் ஒரு சில மாதங்களே அணு திட்டத்தில் ஈடுபட முடியாமல் போகும் என்ற வகையில் தெரிவித்து இருந்தது.
ஈரானின் அணு உலைகள் தொடர்ந்து செயல்படும் வகையில் நன்றாகவே உள்ளன என்றும் செறிவூட்டப்பட்ட யுரேனிய பொருட்கள் முன்பே பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈரானில் நடந்த ராணுவ தாக்குதல் வெற்றி என டிரம்ப் கூறி வந்த சூழலில், அமெரிக்காவில் இருந்து வெளிவரும் செய்தி நிறுவனங்களின் இந்த தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், டிரம்ப் ஆத்திரமடைந்துள்ளார். அவர் ட்ரூத் சோசியலில் வெளியிட்ட செய்தியில், இது பொய்யான செய்தி. அமெரிக்க வரலாற்றில் வெற்றியடைந்த ராணுவ தாக்குதல்களில் இதுவும் ஒன்று. இதனை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையில் சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் இணைந்து முயற்சித்து உள்ளன.
ஈரானின் அணு உலைகள் முற்றிலும் அழிந்து விட்டன. சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய இரு பத்திரிகைகளும் பொதுமக்களால் கடுமையாக சாடப்பட்டு வருகின்றன என பதிவிட்டார்.
இந்த சூழலில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், சி.என்.என்.னில் இருந்து நடாஷா பெர்டிராண்டை நீக்க வேண்டும். 3 நாட்களாக பொய்யான செய்திகளை பரப்பும் அவரை நான் கவனித்து கொண்டுதான் இருக்கிறேன்.
அவரை உடனடியாக கண்டிக்க வேண்டும். அதன்பின்னர், ஒரு நாயை போன்று தூக்கி எறிய வேண்டும். லேப்டாப்பை திறந்ததும் பொய் செய்தியையே பரப்பும் வேலையில் ஈடுபடுகிறார். அணு உலைகள் பற்றிய பொய்யான புனைவுகளை வெளியிடுகிறார்.
நம்முடைய பேட்ரியாட் விமானிகள் உண்மையில் சிறந்த பணியை செய்துள்ளனர். முற்றிலும் அழிவுக்கான வேலையை செய்து விட்டனர். ஆனால், அவர்களை மோசமாக சித்தரிக்கும் வகையிலான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார். பொய் செய்தியை வெளியிடும் சி.என்.என்.னில் அவரை வேலை செய்ய அனுமதிக்க கூடாது.
ஒருகாலத்தில் சிறந்த பத்திரிகையாக செயல்பட்ட அதன் மதிப்பை இவரை போன்றவர்கள் அழித்து விட்டனர். அவருடைய ஒரு சார்பு நிலையான செய்திகள் எதிர்மறையாக இருப்பது தெளிவாக தெரிகிறது. இதுதவிர, நேரடி ஒளிபரப்பு நிருபராக இருப்பதற்கான தகுதி எதுவும் இல்லாதவராக அவர் இருக்கிறார். அவரை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என ஆவேசத்துடன் பதிவிட்டு உள்ளார்.