மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோவில் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் இராபுவாடோ நகரில் கிறிஸ்தவ மத நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் தெருவில் குடித்து விட்டு, நடனம் ஆடியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென தாக்குதல் நடத்தினர்.
அவர்கள் துப்பாக்கி சூடு நடத்துவது தெரிந்ததும், சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து நாலாபுறமும் தப்பியோடினர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் ஆன்லைனில் வைரலானது. இராபுவாடோ நகர அதிகாரி ரொடால்போ மெஜ் செர்வான்டிஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது. 20 பேர் காயமடைந்தனர் என கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதுபற்றிய விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளார். கடந்த மாதம் குவானாஜுவாட்டோ மாகாணத்தின் சான் பர்தோலோ டி பெர்ரியாஸ் நகரில் சர்ச் சார்பில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.