சென்னை,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த 371 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி எட்டிப்பிடித்து அசத்தியது.
பென் டக்கெட்டின் அபார சதத்தால் (149 ரன், 21 பவுண்டரி, ஒரு சிக்சர்) 82 ஓவர்களில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பென் டக்கெட் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்து அசத்தினார். முதல் இன்னிங்சில் சதமடித்ததும் அவர் பல்டி அடித்து கொண்டாடினார். 2-வது இன்னிங்சில் சதமடித்தபோது மைதானத்தில் இருந்த கவாஸ்கர், பண்டிடம் பல்டி அடிக்குமாறு கோரிக்கை வைத்தார். இருப்பினும் பண்ட் அடுத்த முறை என்று கூறி நிராகரித்தார்.
இந்நிலையில் அடுத்த முறை சதமடித்தால் தயவுசெய்து பல்டி அடிக்காதீர்கள் என்று ரிஷப் பண்டுக்கு இந்திய முன்னாள் வீரரான அஸ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ரிஷப் பண்டுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து பல்டி அடிக்காதீர்கள். எனெனில் டெஸ்ட் கிரிக்கெட் ஒன்றும் ஐ.பி.எல்.கிடையாது. ஐ.பி.எல்.-ல் 50-60 பந்துகளுக்கு மேல் நீங்கள் விளையாட மாட்டீர்கள். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அப்படி இல்லை. உங்கள் உடல் சோர்வடைந்துவிடும்”என்று கூறினார்.