விஜய்யின் கடைசி படமாக சொல்லப்படும் ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி வரும் ஹெச்.வினோத், படத் தயாரிப்பில் இறங்குகிறார் என்றும், அவர் தயாரிக்கும் முதல் படத்தை ‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மா இயக்குகிறார் என்ற தகவல் பரவி வருகிறது.

அஜித்தின் ‘துணிவு’ படத்தை அடுத்து விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை இயக்கி வருகிறார் ஹெச்.வினோத். சமீபத்தில் விஜய்யின் பிறந்த நாளின் போது ‘ஜன நாயகன்’ படத்தின் முதல் கர்ஜனை (roar) வெளியாகி வைரலானது. விஜய்யின் போர்ஷன் முழுவதையும் அவர் முடித்துக் கொடுத்துவிட்டாலும், இதர நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் ஹெச்.வினோத் படத்தயாரிப்பில் இறங்குகிறார் என்கிறார்கள். கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட சமயத்திலேயே வினோத்திற்கு படத் தயாரிப்பில் ஆர்வம் வந்துவிட்டது. அந்த சமயத்தில் அவரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் சேர்ந்து ஒரு படத்தை தயாரிப்பதாக முடிவானது. அதன பிறகு லோகேஷ் கனகராஜ் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அவர் ‘பென்ஸ்’ படத்தை தயாரித்து வருகிறார். இப்போது ஹெச்.வினோத் தயாரிக்கும் படத்தை ‘குற்றம் கடிதல்’ மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரம்மா இயக்குகிறார் என்ற தகவல் கோடம்பாக்கத்தில் பரவுகிறது.

‘குற்றம் கடிதல்’ படத்தின் மூலம் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் இயக்குநர் பிரம்மா. அடுத்து ஜோதிகா நடித்த ‘மகளிர் மட்டும்’ படத்தை இயக்கியவர் ‘சுழல்’, ‘சுழல் 2′ வெப்சீரீஸ்களையும் இயக்கியிருந்தார். இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி எழுத்தில் உருவான `சுழல்’ வெப் சீரிஸின் முதல் சீசன் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகியிருந்தது.

அதன் வெற்றியைத் தொடர்ந்து இந்தாண்டில் ‘சுழல் 2’ வெப்சீரீஸ் வெளியானது. இயக்குநர் பிரம்மாவும், சர்ஜுன் கே.எம்-மும் இரண்டாவது சீசனின் எபிசோடுகளை இயக்கியிருக்கிறார்கள். வினோத்தின் தயாரிப்பில் பிரம்மா படம் இயக்குநர் என்றதும் இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல் இனி..
”’குற்றம் கடிதல்’, ‘கடைசி விவசாயி’ போன்ற எளிய மனிதர்களின் வாழ்வியலையும், சமூக பொறுப்புகளை சொல்லும் படங்கள் காதலர் ஹெச்.வினோத். அது போல் உள்ள சின்ன பட்ஜெட்டில் அழகான கதைகளை சொல்லும் படங்களையும் இயக்குநர்களையும் வரவேற்கும் வினோத், அதன் இயக்குநர்களையும் கூப்பிட்டுப் பேசி ஊக்குவிப்பது வழக்கம். அதே பண்பு பிரம்மாவிடமும் உண்டு. வினோத்தின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பார்த்துவிட்டு அதன் புரொமோஷன்களிலும் பிரம்மா பேசியிருப்பார்.

சமீபத்தில் ‘சுழல் 2’ படத்தின் வெப்சீரிஸை பார்த்துவிட்டு இயக்குநர் பிரம்மாவிடம் பேசியிருக்கிறார் ஹெச். வினோத். அந்த பேச்சு தான், அவர்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சமயத்தில் பிரம்மா சொன்ன கதை லைன் வினோத்திற்கு பிடித்துவிட, ‘நானே தயாரிக்கிறேன்’ என்று ரெடியாகிவிட்டார் வினோத். இப்போது திரைக்கதைக்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் பிரம்மா. வருகிற ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு கிளம்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்” என்கிறார்கள்.
வாழ்த்துகள் இயக்குநர்களே!