சென்னை: தீவிரவாதிகள் தாக்குதலைத் தடுக்கும் வகையில் நடைபெற்ற 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை நேற்றுடன் நிறைவடைந்தது. ஒத்திகையின்போது தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற 13 வீரர்கள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். இச்சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை `சாகர் கவாச்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் காவல் துறையின் சார்பில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நேற்று முன்தினம் காலை 6 மணிமுதல் நேற்று மாலை 6 மணிவரை 36 மணி நேரம் நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை சென்னையிலும் நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஒத்திகையில் தொடர்ச்சியான வாகனத் தணிக்கை, முக்கிய அரசு உயர் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், போக்குவரத்து முனையங்கள், மக்கள் கூடும் பகுதிகள், தங்கும் விடுதிகளில் சுழற்சி முறையில் தணிக்கை செய்யப்பட்டது.
ஒத்திகையின் ஒரு பகுதியாக தீவிரவாதிகள் வேடமிட்டு கடல் வழியாக சென்னைக்குள் ஊடுருவ முயன்ற 13 ஒத்திகை வீரர்களான போலீஸாரும், அவர்களிடமிருந்து 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.