புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்பட்டது என்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 28) மாலை செய்தியாளர்களிடம் கூறியது: “சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் காரணத்தால் தேசிய தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசன் ஆகிய 3 பேரும் தங்களின் நியமன எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்வதாக கடிதம் அளித்துள்ளனர். அந்தக் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் அனுப்பப்பட்டது. அவர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அனைத்து அமைச்சர்களும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் சாய் ஜெ. சரவணன்குமார் கட்சி பணியாற்ற விரும்பினார். அதனால் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மீது எந்தவித குற்றச்சாட்டும் எழவில்லை. பட்டியலினத்தை சேர்ந்தவர் அமைச்சராக இல்லாமல் அமைச்சரவை பலமுறை இருந்துள்ளது.
இப்போது பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக இருப்பாரா, இல்லையா என்பதை முதல்வர் தான் முடிவு செய்வார். சாய் ஜெ. சரவணன்குமார் விருப்பப்பட்டே ராஜினாமா செய்யதுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். மீண்டும் முதல்வர் ரங்கசாமி தலைமையில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். புதிய நியமன எம்எல்ஏக்கள் நியமிப்பது குறித்து முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டு முடிவு செய்யப்படும்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு நியமன எம்எல்ஏ பதவி கொடுப்பது குறித்து பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சி சேர்ந்து முடிவு செய்யும். நான் சட்டப்பேரவை தலைவராக நீடிப்பேன். தேசிய தலைமை சொன்னால் ராஜினாமா செய்வேன். பாஜக மாநில தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்தவரை நியமிப்பது தொடர்பாக தேசிய தலைமை தான் முடிவு செய்யும். அதுபற்றி என்னிடம் எதுவும் ஆலோசிக்க மாட்டார்கள். இனிவரும் காலங்களில் கட்சியில் பல மாற்றங்கள் இருக்கும்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் 30 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற பல்வேறு களப்பணிகள் நடைபெறும். அதற்காக என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ அதனை தேசிய தலைமையின் அறிவுறுத்தலின்பேரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் செய்வார்கள்.
ராஜினாமா செய்தவர்களில் ஒருவருக்கு பாஜக மாநில தலைவர் பதவி கிடைப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும். பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் வரும் 30-ம் தேதி புதுச்சேரி வருகிறார். அவர் பாஜக மாநில புதிய தலைவரை அறிவிப்பார். காலியாக உள்ள பதவிகள் வருகிற 1-ம் தேதிக்குள் முழுவதுமாக நிரப்பப்படும். புதிய சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கல் நிறைவேற்றம் தொடர்பாக சிறப்பு சட்டப்பேரவை வருகின்ற ஜூலை மாதம் கூட்டப்படும்” என்று தெரிவித்தார்.