வாஷங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றும் இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், நேற்று (ஜூன் 30) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை அமெரிக்கா எவ்வாறு கருதுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த கரோலின் லீவிட், “ஆசிய பசிபிக் பகுதியில் இந்தியா மிகவும் முக்கியமான நட்பு நாடாக உள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் மிகச் சிறந்த உறவைக் கொண்டுள்ளார். அதை அவர் தொடர்ந்து வைத்திருப்பார்.” என்று தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த ANI-ன் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், “அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு மிக நெருக்கமாக உள்ளன என்று அதிபர் கடந்த வாரம் கூறினார். அது உண்மைதான். நான் எங்கள் வர்த்தக செயலாளரிடம் இது குறித்து இப்போதுதான் பேசினேன். அவர் அதிபருடன் ஓவல் அலுவலகத்தில் இருந்தார். அவர்கள் இந்த ஒப்பந்தங்களை இறுதி செய்யும் பணியில் இருக்கிறார்கள். இது தொடர்பான அறிவிப்பை அதிபரிடம் இருந்தும், அவரது வர்த்தகக் குழுவிடமிருந்தும் மிக விரைவில் நீங்கள் கேட்பீர்கள்.” என்று தெரிவித்தார்.
இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “இந்தியாவில் நாங்கள் வர்த்தகம் செய்வதற்கான உரிமையை அளிக்கும் ஒரு ஒப்பந்தத்தை எட்டப் போகிறோம் என்று நினைக்கிறேன். தற்போது, அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் அங்கு செல்ல முடியாது, அதைப் பற்றி யோசிக்கக்கூட முடியாது.
நாங்கள் ஒரு முழுமையான வர்த்தக தடை நீக்கத்தை எதிர்பார்க்கிறோம், இது நினைத்துப் பார்க்க முடியாதது, அது நடக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த நேரத்தில், இந்தியாவுக்குச் சென்று வர்த்தகம் செய்வதை நாங்கள் விரும்புகிறோம்.” என்று தெரிவித்திருந்தார்.
இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான காலக்கெடு ஜூலை 9 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் 8 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இரு தரப்பினரும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேலை செய்து வருகின்றனர்.