அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின், ‘டிராகன்’ விண்கலம் வாயிலாக, ‘ஆக்சியம் மிஷன் 4’ திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சமீபத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.அங்கு சென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.கடந்த 25ஆம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டு, 26 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த சுபான்சு சுக்லா, கடந்த 6 நாட்களாக விண்வெளியில் பல்வேறு விதமான பணிகளை மேற்கொண்டு வந்தார்.
27ஆம் தேதி நுண்ணீர்ப்பு விசை மண்டலம் குறித்தும், அதனால் விண்வெளியில் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.28-ஆம் தேதி முதல், ஈர்ப்பு விசையின் தாக்கம் இல்லாத விண்வெளியில், விதை எப்படி முளைக்கும்? அங்கு வளரும் தாவரங்களின் தன்மை குறித்து ஆய்வுகளை செய்து வருகிறார்.
இதற்காக, தன்னுடன் எடுத்துச் சென்ற வெந்தயம் மற்றும் பயிறு விதைகளை சுபான்ஷு சுக்லா வளர்க்கத் தொடங்கியுள்ளார். பூமி திரும்பும் போது, விண்வெளியின் தாவரங்களின் வளர்ச்சி மற்றும் பூமியின் ஈர்ப்பு விசையில் வளரும் தாவர வளர்ச்சியோடு ஒப்பிட்டு, ஆய்வறிக்கை தயார் செய்ய உள்ளார்.