பால்ய சிநேகம்… காதலருடன் சேர்ந்து 2 குழந்தைகள், கணவரை 2 முறை கொல்ல முயன்ற மனைவி

சம்பல்,

உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியை சேர்ந்தவர் கோபால் மிஷ்ரா. இவருடைய மனைவி நயினா சர்மா. இந்த தம்பதிக்கு சிராக் (வயது 4) மற்றும் கிருஷ்ணா (ஒன்றரை வயது) என 2 மகன்கள் உள்ளனர்.

நயினாவுக்கு சிறு வயதில் இருந்தே ஆஷிஷ் மிஷ்ரா என்பருடன் பழக்கம் இருந்து வந்தது. நாளடைவில் இவர்களுக்கு இடையேயான நெருக்கம் அதிகரித்தது. காதலர்கள் இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி திரிந்தனர். இந்நிலையில், நயினாவுக்கு கோபாலுடன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகளும் பிறந்து விட்டனர்.

ஆனாலும், பழைய காதலை அவரால் மறக்க முடியவில்லை. அவ்வப்போது, காதலர் ஆஷிஷ் மிஷ்ராவை தனிமையில் சந்தித்து வந்துள்ளார். அவர்களுடைய கள்ளக்காதலையும் இருவரும் வளர்த்துள்ளனர். இதற்கு கணவர் மற்றும் குழந்தைகள் தடையாக உள்ளனர் என நினைத்த இருவரும் அவர்களை கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்தனர்.

இதற்காக சதி திட்டம் தீட்டி அந்த நாளுக்காக காத்திருந்தனர். இதன்படி, முதலில் கடந்த ஜூன் 30-ந்தேதி கோபாலுக்கும், 2 மகன்களுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயன்றனர். ஆனால், இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால், கள்ளக்காதலருடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்தி கொலை செய்ய நயினா முயன்றுள்ளார்.

எனினும், இந்த முயற்சியிலும் கோபால் தப்பி விட்டார். இதனால், 2-வது தடவையாக கணவரை கொலை செய்ய நயினா திட்டம் தீட்டினார். இந்த முறை, கோபால் நன்றாக தூங்கி கொண்டிருந்தபோது, தலையணையால் அமுக்கியும், கத்தியால் குத்தியும் கொல்ல முயன்றனர்.

இந்த முறையும் தப்பி பிழைத்த கோபால், கத்தி கூச்சலிட்டு உள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். எனினும், நயினாவும், ஆஷிஷ் மிஷ்ராவும் யாரிடமும் சிக்காமல் அப்போது தப்பி விட்டனர்.

இதனை தொடர்ந்து, பஹ்ஜோய் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், நயினா மற்றும் ஆஷிஷ் ஆகிய இருவரையும் நேற்று மாலை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.