20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வந்தது: ஒரே மேடையில் தோன்றிய உத்தவ் – ராஜ்தாக்கரே

மும்பை,

சிவசேனா கட்சியில் மிகவும் செல்வாக்காக இருந்தவர் ராஜ் தாக்கரே. இவர் பால் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் ஆவார். கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனா கட்சியில் பால் தாக்கரேவுக்கு அடுத்த வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் ராஜ் தாக்கரே கட்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார் ராஜ் தாக்கரே. அப்போது முதல் ராஜ் தாக்கரே – உத்தவ் தாக்கரே எலியும் பூனையுமாக இருந்து வருகின்றனர். இரு தரப்பினரிடையே 20 ஆண்டுகளாக அரசியல் ரீதியாக மோதல் நீடித்து வந்தது.

இந்தச் சூழலில் மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையின்படி, மராட்டியத்தில் 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியைக் கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியுள்ளது அம்மாநில அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இருவரும் இந்தி எதிர்ப்புப் பேரணியை நடத்தினர். மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் இருவரும் பங்கேற்றனர்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இருவரும் ஒரே மேடையில் தோன்றினர். இரு சகோதரர்களும் இணைந்து நடத்திய முதல் பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசியதாவது: “சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவால் செய்ய முடியாத ஒன்றை, தேவேந்திர பட்னவிஸ் செய்து விட்டார். என்னையும், சகோதரர் உத்தவ் தாக்கரேவையும் இணைத்து விட்டார். மராட்டியத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்,” என்றார்.

உத்தவ் தாக்கரே பேசுகையில், “ராஜ் தாக்கரேவும் நானும் ஒன்றுபட்டுள்ளோம். ஒன்றாக ஆட்சிக்கு வருவோம். நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறோம். இந்த மேடை எங்கள் உரைகளை விட முக்கியமானது. ராஜ் தாக்கரே ஏற்கனவே மிகச் சிறந்த உரையை நிகழ்த்தியுள்ளார். இப்போது நான் பேச வேண்டிய அவசியமில்லை,” என்றார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.