திறமையான அந்த இந்திய வீரர் வெளியில் இருப்பதை பார்க்க முடியவில்லை – கெவின் பீட்டர்சன் வருத்தம்

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்திலும், பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று தொடங்கியது. பணிச்சுமையால் கடந்த டெஸ்டில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் களமிறங்கியுள்ளார். இதனால் பிரசித் கிருஷ்ணா வெளியே உட்கார வைக்கப்பட்டுள்ளார். ஆனால் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் திறமை வாய்ந்த வீரரான குல்தீப் யாதவ் வெளியில் இருப்பதை தன்னால் பார்க்க முடியவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “இந்திய அணி அவரை (குல்தீப் யாதவ்) விளையாட வைக்க வேண்டும். இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றது, இன்னொரு போட்டியில் வென்றது. இதனால் அவர்கள் சில மாற்றங்களை செய்ய வேண்டும். நான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஆலோசகராக இருந்தபோது அவருடன் சில விவாதங்களை நடத்தினேன். அங்கு நாங்கள் இங்கிலாந்தில் எவ்வாறு பந்துவீசுவது என்பது குறித்து பேசினோம். தந்திரோபாயங்களைப் பற்றி விவாதித்தோம்.

இங்கிலாந்து ஆடுகளங்களில் எவ்வாறு பந்து வீசவேண்டும்? எங்கு பந்து வீசவேண்டும்? என்பது குறித்து நிறைய பேசியுள்ளேன். இங்கிலாந்தில் அவர் விளையாடுவதைப் பார்ப்பது அருமையாக இருக்கும். அவருக்கு பந்துவீசுவதிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் ஆர்வம் உண்டு. மேலும் எனது நண்பரை களத்தில் பார்க்க நான் மிகவும் விரும்புகிறேன். அவரை பெஞ்சில் பார்ப்பது எனக்குப் பிடிக்கவில்லை” என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.