இந்திய சட்ட நடைமுறைகள் சரி செய்ய வேண்டிய அளவுக்கு சீர்கெட்டு உள்ளது: பி.ஆர். கவாய் பேச்சு

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் நள்சார் சட்ட பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இன்று கலந்து கொண்டார்.

தெலுங்கானா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியான (பொறுப்பு) நீதிபதி சுஜோய் பால் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் பேசும்போது, உதவி தொகையை கொண்டு வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும்படி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், குடும்பத்தினருக்கு நிதி நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டு கொண்டார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, நம்முடைய நாடும், சட்ட முறைகளும் தனித்துவ சவால்களை எதிர்கொண்டுள்ளன. வழக்கு விசாரணைகளில் காலதாமதங்கள் என்பது, சில சமயங்களில் பல தசாப்தங்களுக்கும் நீடிக்கிறது.

சில வழக்குகளில், விசாரணை கைதிகளாகவே பல ஆண்டுகள் காலம் கழித்த பின்னர், அவர்கள் நிரபராதி என தெரிய வரும் பல வழக்குகளையும் நாம் பார்க்கிறோம். நம்முடைய சிறந்த திறமையானது, நாம் சந்திக்க கூடிய சிக்கலான விசயங்களுக்கு தீர்வு காண உதவ கூடும் என்றார்.

நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என வேதனை தெரிவித்த அவர், எனினும், இந்த சவால்களை எங்களுடைய சக குடிமகன்கள் தீர்ப்பார்கள் என்ற நல்ல நம்பிக்கையுடன், மிக எச்சரிக்கையுடனும் இதனை கூறி முடிக்கிறேன் என்று அவர் பேசியுள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.