ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிவிவகார மந்திரிகளுக்கான கூட்டம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர் சீனா பயணம்

பீஜிங்,

சீனாவின் தியான்ஜின் நகரில் வருகிற 15-ந்தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிவிவகார மந்திரிகளுக்கான கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அந்த அமைப்பிலுள்ள சீனா, ரஷ்யா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய 10 உறுப்பு நாடுகளை சேர்ந்த மந்திரிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதனை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இன்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலையில், இந்த கூட்டத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார் என அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

சீன வெளியுறவு மந்திரி வாங் யி, அந்தந்த நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மற்றும் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில், பல்வேறு துறைகள் மற்றும் சர்வதேச, மண்டல விவகாரங்களில் ஒத்துழைப்புக்கான பார்வைகளை தலைவர்கள் பரிமாறி கொள்வர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

சமீபத்தில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவல் ஆகியோர் சீனாவுக்கு சென்று வந்த நிலையில், ஜெய்சங்கரின் இந்த பயணம் அமைகிறது.

கிழக்கு லடாக்கில், அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா மற்றும் இந்தியா இடையே கடந்த 2020-ம் ஆண்டு கடுமையான மோதல் போக்கு ஏற்பட்ட பின்னர், ராணுவ தளபதிகள் மட்டத்திலான பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன்பின்னர், சீனாவுக்கு முதன்முறையாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் பயணம் மேற்கொள்கிறார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.